திருச்சி மாநகராட்சிக்கான தேர்தலில் இரண்டு மணி நேரத்தில் 13 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கிறது.
மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் முக்கிய பிரபலங்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள் உள்ளிட்டவர்கள் தங்கள் வாக்கை செலுத்தி வருகிறார்கள்.
திருச்சியை பொறுத்தவரை அமைச்சர் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டவர்களும் அதிமுக முக்கிய பிரபலங்களும் காலையிலேயே தங்கள் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். பொது மக்களும் மிக ஆர்வத்துடன் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.
இந்தத் தேர்தலில் வாக்களிக்க பொது மக்களிடம் அதிக ஆர்வம் காணப்படுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரண்டு இடங்களைத் தவிர மற்ற இடங்களில் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் தொடர்ந்து நடைபெறுகிறது. இரண்டு இடங்களில் மட்டும் வாக்குப்பதிவு எந்திரங்களில் ஏற்பட்ட சிறிய பிரச்சினை காரணமாக அரை மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு துவங்கியது. எனினும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப் பதிவில் காலை 9 மணி நிலவரப்படி 13 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.