சென்னை ரயில் நிலைய லிப்ட்டில் சிக்கிய 13 பயணிகள்

2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்பு
சென்னை ரயில் நிலைய லிப்ட்டில் சிக்கிய 13 பயணிகள்

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் உள்ள லிப்ட்டில் பயணித்த 13 பயணிகள் சிக்கி தவித்தனர். அவர்களை இரண்டு மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள ரயில் நிலையங்கள் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். தினந்தோறும் ரயில்களில் ஆயிரக்கணக்கானோர் பயணித்து வருகின்றனர். ஆனால், பல ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் கிடையாது. இதனால், கொலை, கொள்ளை சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. இந்நிலையில், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நேற்று மாலை குழந்தை உள்பட 13 பேர் அங்குள்ள லிப்ட்டில் பயணித்துள்ளனர். அப்போது, திடீரென லிப்ட் நடுவழியில் நின்றது. இதனால், லிப்ட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, லிப்ட்டில் இருந்த உதவி எண்ணில் பேசிய பயணிகள், தாங்கள் சிக்கியிருப்பது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு ரயில்வே காவல்துறை மற்றும் தொழில்நுட்பக்குழுவினர் விரைந்து வந்தனர். அவர்கள், லிப்ட்டை இயக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது. இதைத் தொடர்ந்து, தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் லிப்ட்டின் மேல்பகுதியில் இருந்த மின்விசிறியை அகற்றினர். பின்னர் கயிறுகட்டி முதலில் பெண் குழந்தையை வெளியே தூக்கினர். அதனைத்தொடர்ந்து ஒருவர்பின் ஒருவராக மீட்கப்பட்டனர். 2 மணி நேரம் போராட்டத்துக்கு பின்னர் பயணிகள் நிம்மதி அடைந்தனர்.

இது குறித்து தீயணைப்பு வீரர்கள் கூறுகையில், அதிக பளு காரணமாக லிப்ட் கோளாறாகி இருக்கலாம். முறையான பராமரிப்பும் இல்லை. அதனால் லிப்ட் நின்றுவிட்டது. யாருக்கும் பாதிப்பு இல்லாமல் அனைவரும் மீட்கப்பட்டனர்" என்றனர். ரயில் பயணிகளோ, "ரயில் நிலையங்களில் பொதுமக்கள் பலரும் லிப்டை அதிகம் பயன்படுத்துவர்கள். எனவே அதனை முறையாக பராமரிக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in