"இன்னும் 5 மாதத்துக்குள் குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும்" என்று ஈரோடு பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கும், அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து தமிழக அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
அதே நேரத்தில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அண்ணாமலை கடந்த இரண்டு நாட்களாக ஈரோட்டில் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். ஒரு பக்கம் அமைச்சர்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வரும் நிலையில் நேற்று இரவு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
அப்போது பேசிய அவர், "பெண்கள் மனதில் உள்ள கோரிக்கை என்னவென்று எனக்கு தெரியும். குடும்ப தலைவிகளுக்கு உரிமை தொகையை 1000 ரூபாய் இன்னும், அதிகபட்சம் 5 மாதத்திற்குள் வழங்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் எடுத்துள்ளார்'' என்று உறுதி அளித்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த அறிவிப்பு குடும்பத் தலைவிகளை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.