வேலையில்லா திண்டாட்டம் தொடர்பாக மத்திய அரசு மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள பாஜக அரசுகளை விமர்சித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், “ வேலைவாய்ப்பின்மை காரணமாக திருமண வயதுள்ள இளைஞர்களுக்கு மணமகள் கிடைக்காததால் சமூகப் பிரச்சினைகளை உருவாகி வருகிறது” என தெரிவித்தார்.
தேசியவாத காங்கிரஸின் ஜன் ஜாகர் யாத்ரா பிரச்சாரத்தை தொடங்குவதற்கு முன்பாக பேசிய சரத் பவார், பாஜக சமூகங்களுக்கிடையில் பிளவை உருவாக்கி வருவதாகவும், பணவீக்கம் மற்றும் வேலையின்மை போன்ற உண்மையான பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்ப முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.
இது தொடர்பாக பேசிய அவர், "நமது விவசாயிகள் உற்பத்தியை அதிகரித்தால்தான் நாட்டில் உணவு பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். ஆனால் ஆட்சியில் உள்ளவர்கள் விவசாயிகளுக்கு உரிய உதவிகள் வழங்கத் தயாராக இல்லை. மாறாக அவர்கள் இடைத்தரகர்களின் நலன்களைப் பாதுகாத்து சாதாரண மக்களை பணவீக்கத்தின் பள்ளத்தாக்கில் தள்ளுகிறார்கள். தொழில்கள் மகாராஷ்டிராவிலிருந்து வெளியேறுகின்றன, தற்போதுள்ள தொழில்களுக்கு எந்த ஊக்கமும் அளிக்கப்படவில்லை, புதிய தொழில்களை அமைப்பதற்கான வாய்ப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை, இது வேலைவாய்ப்பின்மையை அதிகரிக்க வழிவகுக்கிறது” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், " நான் ஒருமுறை பயணம் செய்யும் போது, ஒரு கிராமத்தில் உள்ள பொது சதுக்கத்தில் 25 முதல் 30 வயதுக்குட்பட்ட 15 முதல் 20 ஆண்கள் சும்மா அமர்ந்திருப்பதைக் கண்டேன். நான் அவர்களிடம் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டேன். அவர்களில் சிலர் பட்டதாரிகள் என்றும், சிலர் முதுகலைப் பட்டதாரிகள் என்றும் சொன்னார்கள். அவர்களிடம் திருமணமாகிவிட்டதா என்று நான் கேட்டபோது, எல்லோரும் எதிர்மறையாக பதிலளித்தனர். அவர்களிடம் காரணம் கேட்டபோது, வேலை இல்லாததால், பெண்கொடுக்க யாரும் தயாராக இல்லை. இந்த புகார்கள் மாநிலத்தின் கிராமப்புறங்களில் அதிகம் கேட்கப்படுகின்றன.
ஆனால், வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்கான கொள்கைகளை பின்பற்றுவதற்கு பதிலாக, சமூகங்கள் மற்றும் மதங்களுக்கு இடையே பிளவுகளை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்” என்று அவர் கூறினார்.