நெல் கொள்முதல் நிலையத்தில் அமைச்சரின் மைத்துனர் தலையீடு: 2 வாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் அதிரடி

நெல் கொள்முதல் நிலையத்தில் அமைச்சரின் மைத்துனர் தலையீடு: 2 வாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் அதிரடி

நெல் கொள்முதல் நிலைய சுமை தூக்கும் தொழிலாளர்களின் பணியில் தலையிடும் வேளாண் துறை அமைச்சரின் மைத்துனரின் தலையீட்டை தடுக்கக் கோரிய வழக்கில் கடலூர் மாவட்ட எஸ்.பி. உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டத்தில் உள்ள வாக்கூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்களாக பணியாற்றும் தொழிலாளர்கள் 14 பேர் சார்பில் பட்டுசாமி என்பவர் மூலமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில் 'இந்த ஆண்டுக்கான கொள்முதல் பணிகள் ஆகஸ்ட் 21-ம் தேதி தொடங்கியது. ஆனால் எங்களால் பணிகளை செய்ய முடியவில்லை. காரணம் வேளாண் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர் கே. பன்னீர்செல்வத்தின் மைத்துனரான ஆர். கனகசபை என்பவர், பணியாளர்களை பணியில் ஈடுபட முடியாமல் தடுத்து, அவரது ஆட்கள் மூலம் மட்டுமே நெல்லை ஏற்றி இறக்க வேண்டுமென கட்டாயப்படுத்துகிறார்.

தமிழ்நாடு உணவுப் பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர், தொழிலாளர் நல ஆணையர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் இதுகுறித்து ஆகஸ்ட் 22-ம் தேதி புகார் அளித்தும், தங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை. தங்களின் வாழ்வாதார பணியில், அமைச்சரின் மைத்துனர் தலையிடுவதை தடுக்கவும், வாக்கூர் நெல் கொள்முதல் நிலையத்திற்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்' எனவும் அந்த மனுவில் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி ஜி. கே. இளந்திரையன், தமிழக அரசு, கடலூர் மாவட்ட காவல்துறை உள்ளிட்டோர் இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in