மகளிர் உரிமைத் தொகையை டாஸ்மாக் மூலம் மீட்டெடுத்துள்ளனர் - திமுகவை சாடும் ராமதாஸ்!

மகளிர் உரிமைத் தொகையை டாஸ்மாக் மூலம் மீட்டெடுத்துள்ளனர் - திமுகவை சாடும் ராமதாஸ்!

மகிழ்ச்சியாக கொண்டாடப்பட வேண்டிய தீபஒளி திருநாளில், போதையின் ஆதிக்கம் காரணமாக 20 உயிர்கள் பலியாகியிருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், போதையை ஒழிக்காமல் புதிய விடியல் பிறக்காது என திமுகவை எச்சரித்துள்ளார்.

 விபத்து
விபத்து

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துக்களில் திமுக கவுன்சிலர், அவரது 6 மாத குழந்தை உட்பட 20க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய நிலையில், தமிழக அரசின் மது கொள்கையே இந்த விபத்துக்களுக்கு காரணம் என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

மகளிர் உரிமைத் தொகை பெற்றவர்கள்
மகளிர் உரிமைத் தொகை பெற்றவர்கள்

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '’மகிழ்ச்சியாக கொண்டாடப்பட வேண்டிய தீபஒளி திருநாளில், போதையின் ஆதிக்கம் காரணமாக 20 உயிர்கள் பலியாகியிருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. சென்னையில் நடந்த விபத்து உள்ளிட்ட பல நிகழ்வுகளுக்கு மது மற்றும் கஞ்சா போதை தான் காரணம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிர்க்கொல்லி மதுவையும், கஞ்சாவையும் ஒழிக்க வேண்டும் என்பதற்கு இதைவிட வலிமையான காரணங்கள் இருக்க முடியாது. மற்றொருபுறம், தீபஒளி திருநாள் மற்றும் அதற்கு முந்தைய இரு நாள்களில் மட்டும் தமிழ்நாட்டில் ரூ.633 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. இது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்படி கடந்த 10-ஆம் நாள் வழங்கப்பட்ட 1138 கோடியில் பாதிக்கும் அதிகமாகும்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

மகளிர் உரிமை, வாழ்வாதாரம், நிதி உதவி, குடும்ப உதவி என பல்வேறு பெயர்களில் மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டாலும் கூட, அதில் பெரும் பகுதி மதுவணிகம் என்ற பெயரில் அரசுக்கே திரும்ப வரும் அவலம் தான் காலம் காலமாக நடந்து கொண்டிருக்கிறது. இதே நிலை நீடிக்கும் வரை தமிழக மக்களுக்கு எந்த விடியலும் கிடைக்காது.

மது போதையில் நடைபெறும் விபத்துக்கள் மற்றும் கொலை உள்ளிட்ட குற்றச்செயல்கள் தான் தமிழகத்தின் அமைதிக்கு ஆபத்தாக உள்ளன. மதுவையும், கஞ்சாவையும் ஒழிக்காமல் தமிழ்நாட்டை முன்னேற்ற முடியாது என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. எனவே, தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்துவதுடன், கஞ்சா நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்க அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்'' என்று வலியுறுத்தியுள்ளார்.

x
காமதேனு
kamadenu.hindutamil.in