உ.பியில் பெண்கள் மீது போலீஸார் கொலைவெறி தாக்குதல்: வைரலாகும் வீடியோ

உ.பியில் பெண்கள் மீது போலீஸார்  கொலைவெறி தாக்குதல்: வைரலாகும் வீடியோ

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பைக் கண்டித்து போராடிய பெண்கள் மீது போலீஸார் லத்தி மற்றும் கட்டைகளால் கொடூரமாக தாக்குதல் நடத்திய வீடியோ வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் அம்பேத்கர்நகர் மாவட்டம் ஜலால்பூரில் அம்பேத்கர் சிலை இருந்தது. இந்த சிலை மர்மநபர்களால் நேற்று முன்தினம் உடைக்கப்பட்டது. இதனைக் கண்டித்து பெண்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு போலீஸார் எச்சரித்தனர். ஆனால், பெண்கள் கலைந்து செல்ல மறுத்தனர். சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதனால் அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் போலீஸார் தாக்குதலில் ஈடுபட்டனர். தப்பியோடும் பெண்களை லத்தி, கட்டைகளைக் கொண்டு போலீஸார் தாக்கும் வீடியோ இன்று சமூக வலைதளங்களில் வைரலானது. பெண்களின் தலைமுடியைப் பிடித்து போலீஸார் தாக்கும் காட்சிகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அம்பேத்கர் நகர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அஜித்குமார் சின்ஹா கூறுகையில், "போராட்டக்காரர்கள் சிலர் கற்களை வீசியதுடன், போலீஸ் வாகனத்தையும் சேதப்படுத்தினர். அப்போது நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர போலீஸார் லேசான தடியடி நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in