
மகளிர் உரிமைத்தொகை தங்களுக்கும் வழங்க வேண்டும் என்று இதுவரை உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியின் படி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ம் தேதி தமிழகத்தில் தொடங்கப்பட்டது. இதற்காக ஒரு கோடியே 67 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இந்த நிலையில் அவர்களில் அரசு விதித்திருந்த தகுதிகளின் அடிப்படையில் ஒரு கோடியே 6 லட்சம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் வங்கிக் கணக்கிற்கு 1000 ரூபாய் செலுத்தப்பட்டது.
இதில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் முறையீடு செய்யலாம் என்று தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அப்படி முறையீடு செய்தாலும் அதற்கான பயன் ஒன்றும் கிடைக்கவில்லை என்று பெண்கள் குற்றம் சாட்டுகிறார்கள். நிராகரிக்கப்பட்டவர்களும் புதிதாக விண்ணப்பித்தவர்களும் தங்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என்று அரசு அதிகாரிகளிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதை வலியுறுத்தி அவ்வப்போது போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தங்களுக்கும் கலைஞர் உரிமைத்தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பெண்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். வட்டாட்சியர் சமாதானப் படுத்திய பிறகே அவர்கள் கலைந்து சென்றனர்.
இன்று அதேபோல புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே ஆலங்காடு பகுதியில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அரசு வழங்கும் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் கிடைக்காதவர்கள் தங்களுக்கு உரிமை தொகை வழங்க வேண்டும் என்று கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். அரசு அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போக செய்தனர்.
மகளிர் உரிமைத் தொகை என்பது தங்களுக்கான உரிமை என்று அது கிடைக்காத பெண்கள் முடிவு செய்து அதற்காக போராடும் மனநிலைக்கு வந்துள்ளனர். இது ஆளும் அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
சோகம்... காதல் திருமணம் செய்த மகன்... மனமுடைந்த பெற்றோர் தற்கொலை!
கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை! உருக்கமான கடிதம் சிக்கியது!
பகீர் வீடியோ... காதலியின் கண் முன்னே கொலை செய்யப்பட்ட கவிஞர்!
அதிர்ச்சி... பள்ளத்திற்குள் பஸ் கவிழ்ந்து 3 குழந்தைகள் உள்பட 16 பேர் பலியான சோகம்!