செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண் நிர்வாகிகள் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
பாஜகவின் நிலவி வரும் கோஷ்டி பூசல் மற்றும் தலைமையின் மேல் ஏற்பட்டுள்ள அதிருப்தியின் காரணமாகவும் தமிழகம் முழுவதும் பாஜகவின் நிர்வாகிகள் பல்வேறு கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.
இந்நிலையில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் முன்னிலையில் பாஜக மாவட்ட துணைத்தலைவர் கங்கா தேவி தலைமையில் அக்கட்சியைச் சேர்ந்த 80 பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் இன்று அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இதன் பின் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில்,‘’ பாஜகவில் பெண்களுக்கு மதிப்பு இல்லை. உழைப்பவர்களை மதிப்பதில்லை. பணம் இருப்பவர்களுக்கே மதிப்பு கிடைக்கிறது. மேலும் தமிழக எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியின் ஒற்றைத் தலைமையின் கீழ் அதிமுக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதிமுகவில் மட்டுமே எங்களுக்கு உரிய மரியாதையும், பாதுகாப்பும் இருப்பதனால் நாங்கள் இந்த முடிவை ஏற்று வருகின்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்க பாடுபடுவோம்’’ என்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொத்தாக பாஜகவினர் விலகியுள்ளது அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.