10.5% இடஒதுக்கீட்டுக்காக சாகும்வரை உண்ணாவிரதமிருந்து உயிரை விடவும் தயார்: ராமதாஸ் எச்சரிக்கை

ராமதாஸ் அன்புமணி ராமதாஸ்
ராமதாஸ் அன்புமணி ராமதாஸ்

10.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்க சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து என் உயிரையும் விட தயாராக உள்ளேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்

திண்டிவனத்தில் இன்று பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய அன்புமணி ராமதாஸ், "இந்தியாவில் 6 இட ஒதுக்கீடுகளை பெற்று கொடுத்தவர் ராமதாஸ். ஆர் எஸ் எஸ் தொடங்கப்பட்டு பின் பாஜக உருவானது. அதுபோல வன்னியர் சங்கம் தொடங்கப்பட்டு பாமக உருவானது. நாம் நாட்டுக்கு பெற்று கொடுத்ததை போல வேறு யாரும், எந்த கட்சியும் பெற்றுதரவில்லை. பாமகவுடன் சமூக முன்னேற்ற சங்கம், பசுமைத்தாயகம் என 34 அமைப்புகள் இயங்கிவருகிறது.

10.5 சதவீத இட ஒதுக்கீடு பெறுவதற்கு எத்தனை அவமானங்கள், போராட்டங்கள் நடத்தி அரசை கெஞ்சினோம். இதை பெறுவதற்கு நமக்கு அதிகாரம் வேண்டும். வன்னியர் சங்க மாநாடு நடத்த அனுமதி தற்போது கிடைக்கவில்லை. எனவே விரைவில் நடக்கும். எனவே சுவர் விளம்பரங்களை அழிக்கவேண்டாம். 10.5 சதவீத இட ஒதுக்கீடு இக்கல்வி ஆண்டுக்குள் அளிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். அரசுக்கு 22 லட்சம் கடிதங்கள் சென்றுள்ளது. இன்னமும் 28 லட்சம் கடிதங்களை அனுப்ப கட்சி நிர்வாகிகள் முயற்சி எடுக்கவேண்டும்.இது மிகப்பெரிய அழுத்தமாக இருக்கும். இம்மாதத்திற்குள் அளிக்காவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்க ராமதாஸ் முடிவெடுப்பார். மது ஒழிப்பைப்பற்றி அனைத்து அரசியல் கட்சிகள் பேசும் நிலைக்கு கொண்டுவர ராமதாஸ்தான் காரணம். மதுவினால் சமூக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மதுவை பிரபலப்படுத்த அரசாக உள்ளது. மதுவிடமிருந்து அடுத்த தலைமுறையை நாம் காப்பாற்றவேண்டும். 55 ஆண்டுகாலம் இந்த 2 கட்சிகள் ஆண்டது போதுமென்ற மனநிலை மக்களுக்கு வந்துள்ளது. 2026ம் ஆண்டு நாம் உறுதியாக ஆட்சிக்கு வருவோம். சமூக ஊடகத்தில் நமக்கு இருக்கும் பலம் வேறு கட்சிகளுக்கு கிடையாது” என்று அவர் பேசினார்.

இதனைத் தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியது, “தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு கட்சி பணம் கொடுக்காது. நீங்களும் செலவிடவேண்டாம். மக்களை நம்புங்கள். தமிழகத்தில் உள்ள வெற்றிடத்தை நாம்தான் நிரப்பவேண்டும். நம்மிடம் உள்ளது போல மனித வளம் எந்த கட்சியிலும் கிடையாது. வன்னியர் சங்கமும், பாமகவும் இரண்டு தண்டவாளங்களாக இணைந்து நில்லுங்கள். 10.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்க சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து என் உயிரையும் விட தயாராக உள்ளேன். தமிழ்நாட்டில் நாம் தமிழை வளர்க்க முன்வாரவிட்டால் யார் வளர்ப்பார்கள். தமிழை வளர்க்க ஆர்வம் காட்டாவிட்டால் நீங்கள் இங்கிலாந்திலிருந்து வந்த வெள்ளைக்காரன் என்று சொல்லிவிடுவேன் ஜாக்கிரதை” என்று அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் கௌரவத்தலைவர் கோ.க.மணி, வன்னியர் சங்கத்தலைவர் அருள்மொழி, கட்சியின் பொருளாளர் திலகபாமா, பொதுச் செயலாலர் வடிவேல் ராவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in