மின்துறை அமைச்சர் தூக்கத்தில் இருந்து விழிப்பாரா?: கேள்வி எழுப்புகிறார் பாஜக அண்ணாமலை

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை.மின்துறை அமைச்சர் தூக்கத்தில் இருந்து விழிப்பாரா?: கேள்வி எழுப்புகிறார் பாஜக அண்ணாமலை

போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாமல், கடந்த சில மாதங்களில் மின்ஊழியர்கள் பலர் மரணமடைந்துள்ளனர். எனவே, மின்துறை அமைச்சர் தூக்கத்திலிருந்து விழித்து, மின் துறை ஊழியர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், " திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, மின்துறை பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும்போது, மின்சார விபத்தில் மரணமடைந்த மின் துறை ஊழியர்களின் எண்ணிக்கை அதிர்ச்சியடைய வைக்கிறது.

ஆளுங்கட்சிக்கோ, துறை அமைச்சருக்கோ, மின்துறை ஊழியர்களைப் பற்றிய அக்கறையோ கவலையோ இல்லை. போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாமல், கடந்த சில மாதங்களில் திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த மின் வாரியம் வயர்மேன் குமணன், நாகை மாவட்ட மின் ஊழியர் சிவசங்கரன், திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகாவைச் சேர்ந்த மின் ஊழியர் வெங்கடேசன், காஞ்சிபுரம் வெள்ளைகேட் பகுதி மின் ஊழியர் பக்கிரிசாமி, ஜோலார்பேட்டை மின் ஊழியர் முருகன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் மட்டுமல்லாது, மேலும் பல மின் ஊழியர்களும் மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகி, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் துயரமான சம்பவங்கள் எல்லாம், நாளிதழ்களில் ஒரு நாள் செய்தியாகவே கடந்து செல்கின்றன. மின்சாரத் துறைக்கும் பொறுப்பான அமைச்சரோ, இது பற்றி எந்தக் கவலையும் இல்லாமல், டாஸ்மாக் விற்பனையில் மட்டுமே முழுக் கவனமும் செலுத்தி வருகிறார்.

மின்துறையில் பணிபுரிபவர்களுக்கு, பாதுகாப்பு என்பது மிக முக்கியமான தேவையாகும். அவர்கள் பணிச்சூழலை அவ்வப்போது கவனமாக ஆய்வு செய்து, அனைத்து வகையான மின் ஆபத்துகள், வெள்ளம் மற்றும் உயர் மின்னழுத்த பகுதிகளைச் சுற்றியுள்ள மின்கம்பங்களில் பணிபுரிவதால் ஏற்படும் ஆபத்து, சரியான பாதுகாப்பு உபகரணங்கள் அணியாததால் ஏற்படும் அபாயம் குறித்து அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்.

ஊழல் இல்லாமல், தரமான மின் பொருள்களைக் கொள்முதல் செய்வது மின்சாரத்தால் ஏற்படும் இறப்புகளைக் குறைக்கும். எனவே, மின்துறை அமைச்சர் தூக்கத்திலிருந்து விழித்து, மின் துறை ஊழியர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

அவர்களுக்குத் தேவையான தரமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும். பராமரிப்புப் பணிகளில் ஊழியர்கள் ஈடுபடும்போது, மின் துறைப் பொறியாளர்கள் உடனிருக்க வேண்டும். மின் ஊழியர்களின் பணிச் சூழல் பாதுகாப்பில் தொடரும் அலட்சியப் போக்கை நிறுத்திவிட்டு, 2020 தொழில்சார் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் குறியீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இனியும் மின் துறை ஊழியர்களின் உயிர்களோடு விளையாடும் அமைச்சரின் அலட்சியப் போக்கு தொடருமானால், தமிழக பாஜக அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது என்று எச்சரிக்கிறேன்" என்று அறிக்கையில் கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in