அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் பதவியை ராஜினாமா செய்வேன்: அண்ணாமலையின் பேச்சால் சலசலப்பு

அண்ணாமலை
அண்ணாமலைஅதிமுகவுடன் கூட்டணி வைத்தால் பதவியை ராஜினாமா செய்வேன்: அண்ணாமலையின் பேச்சால் சலசலப்பு

வருகிற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி என்று முடிவு எடுத்தால், எனது பதவியை ராஜினாமா செய்துவிடுவேன். சாதாரண தொண்டனாகவே கட்சி பணிகளைச் செய்வேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பேசினார். அவரது பேச்சுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் குரல்கள் எழுந்ததால் நிர்வாகிகள் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

சென்னை அமைந்தகரையில் உள்ள மண்டபத்தில் தமிழ்நாடு பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் துணைத்தலைவர் சக்கரவர்த்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. கட்சி நிதி வசூலிப்பது தொடர்பாகவும், பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாகவும், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் பேசினார்.

இதன் பின் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில்," தமிழகத்தில் நாம் தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். கூட்டணி நிலைப்பாட்டை எடுத்தால், தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன். பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கு நேரம் கேட்டு இருக்கிறேன். கர்நாடக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதால் மே 10- ம் தேதி வரை கட்சி பணிகளில் பிஸியாக இருப்பேன்" என்றார்.

அப்போது பாஜக மாநில துணைத்தலைவரான நாராயணன் திருப்பதி," உங்களுடை பேச்சு தெளிவாக இல்லை. எனவே, விளக்கமாக கூறுங்கள்" என்று அண்ணாமலையிடம் கூறினார். இதற்கு மதுரையைச் சேர்ந்த பொருளாதாரப் பிரிவு மாநில நிர்வாகியான ஷா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், அதேநேரத்தில்அண்ணாமலையின் கருத்துக்கு ஏராளமனோர் ஆதரவு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

இதன் பின்னர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ பேசுகையில், "கட்சியின் மையக்குழுவில் பேசவேண்டிய கருத்தை ஏன் இப்போது பேசுகிறீர்கள்?" என்று கேட்டார். இதனால் பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்கள் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இக்கூட்டத்தில், பாஜக எம்எல்ஏக்கள் காந்தி, சரஸ்வதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in