சென்னை அலுவலகப் பணிக்கு எதற்கு இந்தி?

மத்திய அரசின் அறிவிப்புக்கு கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு
சென்னை அலுவலகப் பணிக்கு எதற்கு இந்தி?

சென்னை முட்டுக்காட்டில் உள்ள மாற்றுத் திறனாளி அதிகாரமளித்தல் தேசிய மையப் பணிக்கான வேலைவாய்ப்பு விளம்பரத்தில், 'இந்தி அறிவு தேவை' என்று குறிப்பிடப்பட்டிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மத்திய சமூக நீதி - அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் விரேந்திர குமாருக்கு இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், "மாற்றுத் திறனாளி அதிகாரமளித்தல் தேசிய மையம், முட்டுக் காடு, சென்னை 13.04.2022 அன்று பணி நியமன அறிவிக்கை ஒன்றை விடுத்துள்ளது. ஒரே ஒரு 'உதவி தேர்வு கட்டுப்பாட்டாளர்' பதவிக்கான நேர்காணல் தேர்வுக்கான அறிவிப்பு அது. எதிர்வரும் 22.04.2022 அன்று தேர்வு நடைபெறவுள்ளது.

அந்த அறிவிக்கையில் தேர்வுக்கான தகுதிகளில் ஒன்றாக, 'புரிந்து கொள்ளக் கூடிய அளவிற்கு இந்தி அறிவு' வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. இது அலுவல் மொழிச் சட்ட விதிகள் 1976 ஐ மீறுவதாகும். மண்டலம் 3-ல் இடம் பெற்றுள்ள மாநிலங்களில் அலுவல் தொடர்பு மொழியாக ஆங்கிலமே நீடிக்கும் என்று அவ்விதிகள் தெளிவாக கூறுகிறது. ஒன்றிய அரசிடமிருந்து வரும் தகவல்கள் ஆங்கிலத்தில் இருக்க வேண்டுமென்றும், மண்டலம் 3-ல் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களில் இருந்து செல்லும் கடிதங்களும் ஆங்கிலம் அல்லது இந்தியில் (இந்தி மட்டுமல்ல) இருக்கலாமென்றும் தெளிவாக உள்ளது. எனவே இந்தி மொழி அறிவை தேர்வுக்கான தகுதியாக இந்தியா முழுவதும் எந்திரகதியாக விரிவுபடுத்த, வலியுறுத்த வேண்டிய எந்த அவசியமும் இல்லை.

இரண்டாவதாக, இந்த நிபந்தனை தமிழ்நாட்டில் இருந்து வரும் தேர்வர்களுக்கு பாதிப்பை உருவாக்குவது மட்டுமின்றி, அப்பட்டமான இந்தி திணிப்பாகும். எனவே தாங்கள் மாற்றுத் திறனாளி அதிகாரமளித்தல் தேசிய மையம், முட்டுக்காடு, சென்னைக்கு இந்தி மொழி அறிவை மேற்கண்ட தேர்வுக்கான தகுதியாக வலியுறுத்த கூடாது என்றும், இந்த நிபந்தனையை அகற்றி புதிய அறிவிக்கை வெளியிடுமாறு அறிவுறுத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in