தமிழக ஆளுநரை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்துப் பேசியது ஏன்? என்பது குறித்து அவரது சகோதரர் சத்ய நாராயணராவ் விளக்கம் அளித்துள்ளார்.
2021-ல் நடந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரஜினி, உடல்நிலை மற்றும் கரோனாவை காரணம் காட்டி பின்வாங்கினார். அவரது அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துவிட்டது. இதன் பின்னர், தமிழக அரசுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு ஆதரவாகவும் பேசி வரும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை அண்மையில் ரஜினிகாந்த் திடீரென சந்தித்துப் பேசினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ஆளுநரிடம் அரசியல் பேசினேன் என்று கூறியது தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. 2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ரஜினி களமிறங்கப் போகிறாரோ என்ற கேள்வி எழுந்தது. இதன் பின்னர், நான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று ரஜினி அறிவித்து முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்நிலையில், ஆளுநரை ரஜினிகாந்த் சந்தித்துப் பேசியது குறித்து அவரது சகோதரர் சத்ய நாராயண ராவ் பதில் அளித்துள்ளார். சென்னை வியாசர்பாடியில் ரஜினிகாந்த் பெயரில் சமூக அறக்கட்டளையை அவரது சகோதரர் சத்யநாராயண ராவ் நேற்று தொடங்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சத்ய நாராயண ராவ், படப்பிடிப்பு முடிந்ததும் ரசிகர்களை ரஜினிகாந்த் கண்டிப்பாக பார்ப்பார். ரசிகர் இல்லாமல் யாரும் இல்லை. ரசிகர்களின் அன்பு, பாசம்தான் ரஜினியின் உயர்வுக்கு காரணம். அன்பு, பாசத்தின் அடிப்படையில் ஆளுநரை ரஜினிகாந்த் சந்தித்து பேசினார். ரஜினிகாந்த் மீண்டும் அரசியலுக்கு வருவது இறைவன் கையில் இருக்கிறது" என்றார்.