மேகாலயா, நாகாலாந்து, திரிபுராவில் ஆட்சியமைக்கப்போவது யார்?- வெளியானது கருத்துக்கணிப்பு!

வாக்குப்பதிவு
வாக்குப்பதிவு மேகாலயா, நாகாலாந்து, திரிபுராவில் ஆட்சியமைக்கப்போவது யார்?- வெளியானது கருத்துக்கணிப்பு!

மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்களில் எந்த கட்சி ஆட்சியை கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியிருக்கிறது.

மேகாலயாவில் 60 தொகுதிகளுக்கும், நாகாலாந்தில் 60 தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. மேகாலயா மாநிலத்தில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 375 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் சோஹியாங் தொகுதியில் ஒரு வேட்பாளர் உயிரிழந்ததால், 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகள் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டன. ஆளும் தேசிய மக்கள் கட்சி (என்.பி.பி.) 57 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் 56 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

நாகாலாந்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 184 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இதில் பா.ஜ.க. ஒரு இடத்தில் போட்டியின்றி வெற்றி பெற்றது. இதனால் 59 தொகுதிகளுக்கு இன்று காலை தேர்தல் நடைபெற்றது. ஆளும் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி (என்.டி.பி.பி.)-பா.ஜ.க. கூட்டணி இணைந்து முறையே 40, 20 தொகுதிகளில் போட்டியிட்டன. இதுபோல காங்கிரஸ் 23 இடங்களிலும், நாகா மக்கள் முன்னணி 22 தொகுதியிலும், ஜன்சக்தி கட்சி (ராம்விலாஸ் பாஸ்வான்) 15 தொகுதிகளிலும் போட்டியிட்டது.

மேகாலயாவில் 82.42 சதவீத வாக்குகளும், நாகாலாந்தில் 74.32 சதவீத வாக்குகளும் பதிவானது. திரிபுராவில் கடந்த 16-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து திரிபுராவுடன், மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தல் மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி உள்ளிட்ட அனைத்து தேர்தல்களிலும் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதனிடையே, திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் இன்று வெளியிடப்பட்டது. திரிபுராவில் பாஜக 36 முதல் 45 இடங்களும், இடதுசாரிகள் 6 முதல் 11 இடங்களும், டிஎம்பி 9 முதல் 16 இடங்களை கைப்பற்றும் என்று இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேகாலயாவில் பாஜக 5 இடங்களையும், காங்கிரஸ் 3 இடங்களையும், என்பிபி 20 இடங்களையும், பிற கட்சிகள் 30 இடங்களையும் கைப்பற்றும் என்று டைம்ஸ்நவ் கருத்து கணிப்பு வெளியிட்டு இருக்கிறது. இதேபோல் திரிபுராவில் பாஜக 24 இடங்களிலும், காங்கிரஸ் 21 இடங்களிலும், டிஎம்பி 14 இடங்களிலும், பிற கட்சிகள் ஒரு இடங்களிலும் வெற்றி பெறும் என்று டைம்ஸ்நவ் கருத்துக் கணிப்பு வெளியிட்டு இருக்கிறது.

நாகாலாந்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் பாஜக 38 முதல் 48 இடங்களிலும், காங்கிரஸ் 1 முதல் 2 இடங்களிலும், நாகா மக்கள் முன்னணி 3 முதல் 8 இடங்களிலும், பிறக்கட்சிகள் 5 முதல் 15 இடங்களிலும் வெற்றி பெறும் என்று இந்தியா டுடே வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in