திருச்சி சூர்யா சிவா ஆடியோவை மீடியாக்களுக்கு கசியவிட்டது யார்?: நடிகை காயத்ரி ரகுராம் ட்விட்டரில் பரபரப்பு

திருச்சி சூர்யா சிவா ஆடியோவை மீடியாக்களுக்கு கசியவிட்டது யார்?: நடிகை காயத்ரி ரகுராம்  ட்விட்டரில் பரபரப்பு

திருச்சி சூர்யா சிவாவின் ஆடியோவை கசியவிட்டது யார் என்பதை பாஜக மாநில தலைவர் அண்ணாமலையால் எளிதாக கண்டுபிடிக்க முடியும் என்றும் அக்கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

பாஜக சிறுபான்மையினர் அணி மாநில தலைவர் டெய்சி சரண், பாஜக ஓபிசி அணியின் மாநிலப்பொதுச்செயலாளர் திருச்சி சூர்யா சிவா இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக ஆடியோ நவ.23-ம் தேதி வெளியாகி பரபரப்பை கிளப்பியது. இந்த ஆடியோவில் டெய்சி சரணை ஆபாசமாக பேசி கொலைமிரட்டல் விடுத்த பிரச்சினையில் திருச்சி சூர்யா சிவா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பாஜக தலைமை உத்தரவிட்டது. கட்சி பொறுப்புகளில் இருந்து திருச்சி சூர்யா சிவா 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்நிலையில் திருச்சி சூர்யா சிவாவை விமர்சித்து நடிகை காயத்ரி ரகுராம் பதிவிட்டிருந்தார். இதையடுத்து பாஜகவின் கட்டுப்பாட்டை மீறியதாகவும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாகவும் கூறி அக்கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவரான காயத்ரி ரகுராமை 6 மாத காலம் கட்சியில் சஸ்பெண்ட் செய்து அண்ணாமலை உத்தரவிட்டார்.

இந்நிலையில், நடிகை காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், " சில நேர்காணல்களைப் பார்த்தேன். திருச்சி சூர்யா ஆடியோவை நான் கசியவிட்டதாக மக்களிடம் என்னைக் கட்டமைக்கிறார்கள். அவர்கள் அப்படிச் சொல்லச் சொன்னார்களா அல்லது வதந்திகளை நம்புகிறார்களா அல்லது வதந்திகளை உருவாக்குகிறார்களா என்று எனக்குத் தெரியாது.

ஆனால், முதலில் உரையாடலைப் பதிவு செய்தவர் நான் அல்ல. அதேபோல் முதலில் இந்த ஆடியோவை மாநில அலுவலகத்தில் உள்ள முக்கிய நபர்களுக்கு நான் கொடுக்கவில்லை. பிரபல ஊடகவியலாளர் ஒருவர் இந்த ஆடியோவை வெகு காலத்திற்கு முன்பே பெற்று உரையாடலைக் கேட்டார் என்று அவர் ஒரு பேட்டியில் வெளிப்படையாக கூறினார். மீடியாவுக்கு ஆடியோவை யார் கொடுத்தார்கள் என்பதை அண்ணாமலை கண்டுபிடிப்பது எளிது. சில பிரபல அரசியல் விமர்சகர்கள் இந்த குற்றச்சாட்டுகளை என் மீது கூறி வருகின்றனர். அதற்காக பாஜக மாநில தலைவரிடம் புகார் அளித்துள்ளேன். திருச்சி சூர்யா ஆடியோவை மீடியாக்களுக்கு கசியவிட்டது யார் என்பதைக் கண்டுபிடித்து அந்த நபர் மீது மாநில தலைவர் அண்ணாமலை நடவடிக்கை எடுப்பார் என உறுதியாக நம்புகிறேன். உண்மைக்கு ஆதரவாக நின்றவர்களுக்கும் இந்த இக்கட்டான நேரத்தில் எனக்கு உணர்வு பூர்வமாக ஆதரவளித்தவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி " என்று அதில் பதிவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in