தஞ்சை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரான எம்.ஜி.எம்.சுப்ரமணியன் வைத்திலிங்கத்தின் தீவிர விசுவாசி. இதையே காரணமாக வைத்து அவரை கட்சியைவிட்டு நீக்கியது ஈபிஎஸ் தரப்பு. இதையடுத்து இந்தப் பதவிக்கு ஈபிஎஸ் அணிக்குள்ளேயே பலரும் முட்டிமோத ஆரம்பித்துவிட்டார்கள். இதில் முக்கியமானவர், கும்பகோணம் முன்னாள் எம்எல்ஏ-வான இராம.ராமநாதன். ஈபிஎஸ்சுடன் நெருக்கமாக இருக்கும் ராமநாதன், தனக்குத்தான் மா.செ. பதவி என மார்தட்டுகிறாராம். இவருக்குப் போட்டியாக, முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணு வின் மகன் ஐயப்பனும் முண்டாசுகட்டி நிற்கிறார். முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் தனக்கிருக்கும் நெருக்கத்தை வைத்து இவர் போட்டிக்கு வருகிறாராம். இவர்களுக்கு நடுவில் திருவையாறு முன்னாள் எம்எல்ஏ-வான ரெத்தினசாமியும் கோதாவில் நிற்கிறார். இவருக்கு முன்னாள் அமைச்சர் காமராஜ் சப்போர்ட்டாம். மோதும் மூவருமே வெவ்வெறு சமூகத்தினர் என்பதால் இவர்களில் யாருக்கு பதவி கொடுத்தாலும் சிக்கல் வரும் என்பது ஒருபுறமிருக்க, “எடப்பாடி எடுத்த எந்த நடவடிக்கையும் செல்லாதுன்னு கோர்ட்டே சொல்லிருச்சு... அப்புறம் எதுக்கப்பா இவங்க என்னோட பதவிக்கு குஸ்திகட்டுறாங்க” என கூலாகச் சொல்கிறாராம் எம்.ஜி.எம்.சுப்பிரமணியன்.