
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் நடந்த மோதலில் தமிழக மாணவர் தாக்கப்பட்டார். அவரை வீடியோ காலில் தொடர்பு கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாளைக் கொண்டாடியதாக கூறப்படுகிறது. பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கான பொதுவான அறை ஒன்றை நடந்த அந்த நிகழ்வுக்குப் பின்னர், இடதுசாரி அமைப்பைச் சேர்ந்த மாணவர் அமைப்பின் சார்பில் ஆவணப்படம் ஒன்று திரையிடப்பட இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால், ஏபிவிபி அமைப்பினரின் நிகழ்ச்சி முடிந்த பின்னர், அதே அறையில் இருந்ததாகவும், ஆவணப்படம் திரையிட வந்தவர்கள் ஏற்கெனவே நிகழ்ச்சி முடிந்தவர்களை அறையில் இருந்து வெளியேற கூறியதால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஏபிவிபி அமைப்பினர் அந்த அறையில் இருந்த தலைவர்களின் படங்களை அடித்து உடைத்ததாகவும், இதனைத் தட்டிக்கேட்ட தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், "தங்கள் உரிமைகளுக்காகப் போராடுகிற, ஒன்றிய பாஜக அரசை விமர்சிக்கிற மாணவர்கள் மீது வன்முறை வெறியாட்டம் கட்டவிழ்த்து விடப்படும் போதெல்லாம் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பாதுகாப்பு பணியாளர்களும், டெல்லி காவல்துறையும் கண்மூடி வேடிக்கை மட்டுமே பார்க்கிறார்கள்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, தாக்குதலில் காயமடைந்த தமிழக மாணவர் நாசரை தனது செல்போனில் அழைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உங்கள் மீது தாக்குதல் நடத்தியது யார் என்று கேட்டறிந்ததோடு, வீடியோ காலில் பேசினார். அப்போது நடந்தவற்றை உதயநிதியிடம் மாணவர் நாசர் தெரிவித்தார். விரைவில் டெல்லி வந்து உங்களை சந்திப்பதாகவும் உதயநிதி கூறினார்.