கன்னியாகுமரியில் இருந்து இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கி நான்காவது நாளாக இன்று தொடர்ந்து வருகிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி. அவர் அணிந்திருக்கும் டீ-சர்ட் 40 ஆயிரம் ரூபாய் என பாஜக தரப்பில் இருந்து சமூகவலைதளங்களில் தகவல் பரவியது.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறுகையில், “ராகுலின் நடைபயணம் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் நினைத்து பார்த்ததைவிட லட்சக்கணக்கான மக்கள் நடைபயணத்தில் குவிந்தனர். அவரது கருத்துகளும், எளிமையும் மக்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. வெறும் அரசியல் லாபத்திற்காக மட்டுமே இந்தப் பயணத்தைத் தொடங்கவில்லை. இந்திய மக்களின் ஒற்றுமைக்காகத் தான் நடக்கிறார்.
திருப்பூரில் கோல்டன் ஐஸ் என்னும் கார்மெண்ட் கம்பெனியில் தயாரிக்கப்பட்ட டீ-சர்டைத்தான் ராகுல் காந்தி அணிந்துள்ளார். நடைபயணத்திற்காக 20 ஆயிரம் டீ-சர்ட்களை அடித்தோம். இதில் தொண்டர்கள் பயன்படுத்தும் டீ- சர்ட்டில் தலைவர்களின் படங்கள் போடப்பட்டுள்ளது. ராகுலுக்காக 4 டீ-சர்ட்கள் படங்கள் இல்லாமல் அடிக்கப்பட்டன. அது 40 ஆயிரமும் இல்லை. 4 லட்சமும் இல்லை. மோடிதான் பத்து லட்ச ரூபாயில் கோட் அணிந்து உள்ளார். ராகுலைச் சந்தித்தவர்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை முன்வைத்தனர்” என்றார்.