எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக எப்ஐஆரில் இருப்பது என்ன?

எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக எப்ஐஆரில் இருப்பது என்ன?

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அவரது அண்ணன் உட்பட 13 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வேலுமணி குடும்பத்தினர் வெளிநாடு சுற்றுப் பயணத்திற்காக 1.25 கோடி செலவு செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அ.தி.மு.க ஆட்சியின்போது உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவி வகித்தவர் எஸ்.பி வேலுமணி. இவர் தற்போது தொண்டாமுத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். இவர் தான் பதவியில் இருந்த காலகட்டத்தில் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாகவும் குற்றம்சாட்டி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கடந்த ஆகஸ்டு மாதம் எஸ்.பி வேலுமணி உட்பட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தமிழகம் முழுவதும் சுமார் 60 இடங்களில் சோதனை நடத்தி 13 லட்சம் ரூபாய் பணம், தங்க நகைகள், சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் எஸ்.பி.வேலுமணி, அவரது மூத்த சகோதரர் அன்பரசன், அன்பரசனின் மனைவி ஹேமலதா, எஸ்.பி.வேலுமணியின் தொழில் பங்குதாரர்களான சந்திர சேகர்,

சந்திர பிரகாஷ், கிருஷ்ணவேணி, சுந்தரி உள்ளிட்ட 13 பேர் மீது மேலும் ஒரு சொத்து குவிப்பு வழக்கை கோவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் பதிவு செய்துள்ளனர். குறிப்பாக எஸ்.பி.வேலுமணி தான் அமைச்சராக இருந்த 2016-2021-ம் ஆண்டு காலகட்டத்தில் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து முறைகேடாக தனது பெயரிலும், தன் குடும்பத்தார் பெயரிலும் 58.23 கோடி ரூபாய் சொத்து குவித்துள்ளதாக, முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவருக்கு தொடர்புடைய 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோவையில் 41 இடங்கள், சென்னையில் 8 இடங்கள், சேலத்தில் 4 இடங்கள், திருப்பத்தூரில் 2 இடங்கள், நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் தலா 1 இடம் மற்றும் கேரளா மாநிலத்தில் 1 இடம் என மொத்தம் 58 இடங்களில் இந்த சோதனையானது இன்று காலை 7 மணி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

குறிப்பாக கோவை குனியமுத்தூரில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் வீடு மற்றும் அவரது சகோதரர் மற்றும் பங்குதாரர்கள் நிறுவனங்களான மகா கணபதி ஜுவல்லர்ஸ், செந்தில் & கோ, Constromall goods pvt ltd, Constronics India, Vardhan Infraa structure, Alam Gold & Diamonds ஆகிய நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களில் இந்த சோதனையை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும். எஸ்.பி.வேலுமணி தனது குடும்பத்தினர் மற்றும் உறவினரை பினாமிகளாக வைத்து தான் பதவியில் இருந்த காலகட்டத்தில் எஸ்.பி.வேலுமணி தனது உறவினர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கென சட்டத்துக்கு புறம்பாக பல்வேறு டெண்டர்களைப் பெற்றுக் கொடுத்ததாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பை, ஐதராபாத் பகுதிகளில் உள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் இருந்து லோன் பெற்று அதைத் திருப்பி செலுத்தாமல் காரணம் காட்டியும் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும், அதேபோல தனது உறவினர்கள் மற்றும் பங்குதாரர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களின் வருமானத்தை மறைத்துக் காட்டியும் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் எஸ்.பி.வேலுமணி அவரது குடும்பத்தினருடன் ஹாங்காங், சிங்கப்பூர், மலேசியா உட்பட பல வெளிநாடு சுற்றுலா பயணத்திற்காக 1.25 கோடி ரூபாய் செலவழித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனையின் முடிவில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் குறித்த தகவல்கள் தெரியவரும் என லஞ்ச ஒழிப்பு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in