"ஜனநாயக ரீதியாக அதிமுகவை மீட்டெடுத்து சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்குவோம்" என்று அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் சபதமெடுத்தார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மக்களின் ஆதரவோடு அதிமுகவை மீட்டெடுக்கும் பணிகளை செய்கிறோம். ஜனநாயக முறைப்படி தேர்தலில் வெற்றி பெற்று மீட்டெடுப்போம். ஜனநாயக ரீதியாக அதிமுகவை மீட்டெடுத்து சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்குவோம். தமிழகத்தில் மீண்டும் அம்மாவின் உண்மையான ஆட்சியை கொண்டு வருவோம்.
திமுக ஆட்சி தவறான பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் விடியல் வராது. மக்கள் ஏமாறுவர். திமுக ஆட்சி என்றாலே தமிழகத்திற்கு இருண்ட காலம் என்பது வரலாறு. எங்கள் தொண்டர்கள் ஆரம்பத்தில் இருந்தே எங்களுடன் இருக்கிறார்கள். ஒரு சிலர் சுயநலத்திற்காக வெளியில் சென்றனர். இது அரசியல் இயக்கம். இது கம்பெனி கிடையாது. என்னுடைய சுவாசம் உள்ள வரை நானும், என்னுடைய தொண்டர்களும் போராடுவோம். சிலர் ஆளுங்கட்சியினருக்கு எதிராக மாறுவார்கள். அதில் திரைத்துறையினரும் விதிவிலக்கு அல்ல" என்றார்.