'நாங்கள்தான் உண்மையான மதச்சார்பின்மையை கடைபிடிக்கிறோம்' - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு

பிரதமர் மோடி
பிரதமர் மோடிநாங்கள் உண்மையான மதச்சார்பின்மையை கடைபிடிக்கிறோம்

அரசியல் ஆதாயத்தைப் பற்றி சிந்திக்காமல், சாமானியர்களுக்காக பாடுபடுவதன் மூலம் உண்மையான மதச்சார்பின்மையை தனது அரசாங்கம் கடைப்பிடிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று மாநிலங்களவையில் தெரிவித்தார்.

நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இன்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “பல்வேறு அரசுத் திட்டங்களின் பலன்கள் தகுதியுள்ள அனைத்து பயனாளிகளையும் சென்றடைவதை உறுதி செய்வதே உண்மையான மதச்சார்பின்மை. மத்திய அரசின் திட்டங்களின் பலன்கள் சாமானியர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம் உண்மையான மதச்சார்பின்மையை இந்த அரசு கடைப்பிடிக்கிறது முந்தைய யுபிஏ ஆட்சியைப் போலன்றி, பாஜக தலைமையிலான மத்திய அரசின் முன்னுரிமை பொதுமக்களுக்குத்தான், அரசியல் ஆதாயம் அல்ல. இதன் காரணமாகவே நாட்டில் உள்ள 25 கோடி குடும்பங்களுக்கு எல்பிஜி இணைப்புகள் கிடைக்கச் செய்துள்ளோம். நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய நாங்கள் கடுமையாக உழைக்கிறோம்.

காங்கிரஸ் டோக்கனிசத்தில் மட்டுமே ஈடுபட்டுள்ளது, நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண அவர்கள் ஒருபோதும் முயற்சிக்கவில்லை. 2014-ம் ஆண்டு நான் பிரதமராக பதவியேற்றபோது, இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வலுவான அடித்தளத்தை உருவாக்க நினைத்தாலும், காங்கிரஸ் எல்லா இடங்களிலும் பிரச்சினைகளை உருவாக்கி இருப்பதை நான் பார்த்தேன்" என்று தெரிவித்தது. இன்று மாநிலங்களவையில் பிரதமர் உரையாற்றியபோது எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள், ‘மோடி-அதானி பாய் பாய்’ என்ற முழக்கங்களால் சபையை அதிரவைத்தனர். அப்போது, "தாமரையின் மீது ஒருவர் எவ்வளவு சேற்றை வீசுகிறாரோ, அவ்வளவு சிறப்பாக அது மலரும்" என்று பிரதமர் கூறினார்.

ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயையும் பிரதமர் விமர்சித்தார். இன்று மாநிலங்களவையில் தனது உரையின் போது காங்கிரஸ் தலைவர் கார்கே, அதானி விவகாரத்தில் பிரதமர் மற்றும் பாஜக அரசாங்கம் மீது கடுமையான தாக்குதலை தொடுத்தார். “நான் கல்புர்கிக்கு வருகிறேன், அங்கு நடக்கும் வேலையை அவர் பார்க்க வேண்டும். கல்புர்கியில் 8 லட்சத்துக்கும் அதிகமான கணக்குகள் உட்பட கர்நாடகாவில் 1.70 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. பலர் அதிகாரம் பெறுகிறார்கள், ஒருவரின் கணக்கு மூடப்படும்போது, ​​என்னால் வலியை புரிந்து கொள்ள முடிகிறது”என்று தெரிவித்தார். எதிர்க்கட்சி எம்.பி.க்கள் "மோடி-அதானி பாய்-பாய்" கோஷங்களை எழுப்பியதால், கார்கே தன்னைப் பற்றி பிரதமர் மோடி என்ன சொல்கிறார் என்று கேட்க முடியாமல் திணறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in