
ஒரு வீட்டில், குடியிருப்பில் ஒரே நபரின் பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் ஒன்றிணைத்தல் தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள விளக்கத்தில், "தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் இதுவரை 90 சதவீதத்திற்கு மேல் வீடு, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புகள் ஆதார் எண் இணைக்கும் பணி வெற்றிகரமாய் முடிந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் ஒரே வீட்டில், ஒரே நபரின் பெயரில் உள்ள ஒன்றுக்கு மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகள் ஒன்றிணைக்க வருவதற்காகவே ஆதார் எண் இணைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது என்ற கருத்து பரவி வருகிறது. இந்த கருத்து முற்றிலும் தவறான மற்றும் உண்மைக்குப் புறம்பானதாகும்.
தமிழ்நாடு மின்சார ஒழுங்கு ஆணையம் கடந்த 9.9.2022 அன்று வெளியிட்ட பட்டியல் ஆணையத்தின் தரவுகளின்படி ஆய்வின் அடிப்படையில் ஒரே வீட்டில்/குடியிருப்பில் ஒரு நபரின் பெயரில் ஒரு குடும்பத்தினரை உபயோகிக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகளை ஒன்றிணைக்க அல்லது அத்தகைய கூடுதல் மின் இணைப்புகளை பொது பயன்பாட்டிற்கு மாற்ற உத்தரவு பிறப்பித்து இருந்த போதிலும் சில காரணங்களால் மேற்படி ஒன்றிணைப்பு மற்றும் பணி தொடங்க கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டுள்ளது.
எனவே, இது தொடர்பாக எந்த ஒரு செயல் உத்தரவும் மின்பகிர்மான வட்டங்களில் உள்ள பிரிவு அலுவலகங்களுக்கும் பிறப்பிக்கப்படவில்லை. ஆய்வின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பிரிவு அலுவலர் பிரிவு அலுவலரின் வரைவு செயல் ஒரு தனிப்பட்ட நிகழ்வாகும். இதில் சம்பந்தப்பட்ட அலுவலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.