திமுக மீது சுமத்தப்பட்ட அத்தனை வழக்குகளையும் நீதிமன்றத்தில் தவிடு பொடியாக்கியுள்ளோம்: ஜெயக்குமாருக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி

ஆர்.எஸ்.பாரதி.
ஆர்.எஸ்.பாரதி.

திமுக மீது சுமத்தப்பட்ட அத்தனை குற்றச்சாட்டுகளையும், நாங்கள் நீதிமன்றத்தின் மூலம் தவிடுபொடியாக்கியுள்ளோம். ஆனால், அதிமுக தலைவியிலிருந்து அத்தனை பேரும் குற்றம் நிரூபிக்கப்பட்டு, சிறைத் தண்டனை பெற்றிருப்பதோடு, ஜெயக்குமார் போன்ற பலரின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, தண்டனை பெற உள்ளனர் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.

அதிமுகவையும், இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமியையும் சமீபத்தில் அதிமுகவையும், இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமியையும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்து கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதற்கு அவருக்குக் கண்டனம் தெரிவித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், திமுக அமைச்சர்கள் மீதான விசாரணை பற்றி ஆர்.எஸ்.பாரதி வாய் திறக்கிறாரா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில் அதற்குப் பதிலளித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்," முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் , நான் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்கு தெம்பில்லாமல் - திராணியில்லாமல், என்னுடைய கேள்விகளுக்கு தொடர்பில்லாமல் வாய்க்கு வந்தபடி அறிக்கை என்ற பெயரில் உளறிக் கொட்டியிருக்கிறார்.

திமுக மீது சுமத்தப்பட்டஅத்தனை குற்றச்சாட்டுகளையும், நாங்கள் நீதிமன்றம் மூலம் தவிடு பொடியாக்கினோம். ஆனால், அதிமுக தலைவியிலிருந்து அத்தனை பேரும் குற்றம் நிரூபிக்கப்பட்டு, சிறைத்தண்டனை பெற்றிருப்பதோடு, ஜெயக்குமார் போன்ற பலரின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, தண்டனை பெற உள்ளனர்" என்று கூறியுள்ளார்.

மேலும்," 2001-ம் ஆண்டு வரை நான் நங்கநல்லூர் வீடு கட்டும் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக இருந்தபோது, என்மீது புகார் வந்ததாக ஜெயக்குமார் அவதூறாக குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். 2001-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, நங்கநல்லூர் வீடு கட்டும் கூட்டுறவு சங்கம் மற்றும் நான்கு முறை நகராட்சித் தலைவராக இருந்த ஆலந்தூர் நகராட்சியில் கோப்புகளைத் துருவி துருவி தேடிப் பார்த்தார். இதற்கு காரணமே, ஜெயலலிதாமீது நான் டான்சி வழக்கு தொடுத்ததுதான்.

நான் ஊழல் செய்ததாக எந்த அடிப்படை ஆதாரமும் கிடைக்காத காரணத்தால், சென்னை மாநகராட்சியின் மருத்துவ அதிகாரியாக பணிபுரிந்து வந்த என் துணைவியாரை சஸ்பெண்ட் செய்ய அன்றைய மாநகராட்சி ஆணையராக இருந்த விஜயகுமாரை, ஜெயலலிதா அழைத்துப் பேசியுள்ளார். 'எட்டாண்டு காலமாக ஆர்.எஸ்.பாரதி என் தூக்கத்தைக் கலைத்தார். எனவே, அவருக்கும் அதே நிலை உருவாக்க வேண்டும்' என்று சொன்ன செய்தியை விஜயகுமாரே என்னிடம் சொன்னார். நான் சிரித்துக் கொண்டே 'என் தூக்கத்தை யாராலும் கலைக்க முடியாது என்பதை அந்த அம்மையாரிடம் சொல்லுங்கள்' என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

அதில் என்ன வேடிக்கை என்னவென்றால், எனது டாக்டர் மனைவிக்கு மாநகராட்சியின் சார்பில், 'சிறந்த மருத்துவர்' என்ற அவார்டு கொடுத்த ஒரு வாரத்திற்குள், அவரை பணி நீக்கம் செய்து உத்தரவு அளிக்கப்பட்டது. அதற்காக நான் வருத்தப்படவில்லை. இப்பணி நீக்கம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, வெற்றி பெற்றேன். இச்செய்தி உண்மையா, இல்லையா என்பதை ஜெயக்குமார் மாநகராட்சியிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்" என்று கூறியுள்ளார்.

"ஏறத்தாழ 12 ஆண்டுகள், அதற்குப் பிறகு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவால், எந்த ஒரு வழக்குகூட என் மீது போட முடியவில்லை. ஜெயலலிதாவைவிட, இன்றைக்கு அதிமுகவில் உள்ள ஜெயக்குமார் உள்ளிட்ட எந்தவொரு முன்னணித் தலைவர்களும் பெரிய அறிவாளிகள் இல்லை. அதைபோலத்தான், நங்கநல்லூர் வீடு கட்டும் கூட்டுறவு சங்கத் தலைவராக நான் இருந்தபோது என்மீது எந்த கையாடல் வழக்கும் இல்லை. அப்படி இருந்திருந்தால், ஜெயலலிதா என்னை விட்டு வைத்திருப்பாரா? இந்த சராசரி அறிவுகூட ஜெயக்குமாருக்கு இல்லாதது வருத்தத்தை அளிக்கிறது.

எடப்பாடி பழனிசாமி மீது திமுக சார்பில் நான் தொடர்ந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் புகார் குறித்து நான் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்தேன் என்பதற்காக என்னை பழிவாங்கும் நோக்கத்தோடு, கொடிய கரோனா தொற்று தலைவிரித்தாடிய நேரத்தில் ஈவு இரக்கமின்றி அதிகாலையில் கைது செய்து ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் அடைக்கப்பட்டிருந்த பூந்தமல்லி சப்-ஜெயிலில் தனிமையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்த வேண்டும் என்று ஜெயக்குமார் கும்பல் திட்டமிட்டது.

ஆனால், திமுகவின் பலம் வாய்ந்த சட்டத்துறை வழக்கறிஞர்களின் வாதத் திறமையால், ஒரு மணி நேரத்தில் நான் வெளியே வந்துவிட்டேன். இதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் எனக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று அரசின் பணத்தில் உச்ச நீதிமன்றம் வரை சென்று வாதாடியது ஜெயக்குமார் கும்பல். ஆனால், அவைகள் எல்லாம் தவிடுபொடியாக்கப்பட்டு, என்மீது போடப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது என்ற உண்மையை ஜெயக்குமார் தெரிந்து கொள்ள வேண்டும்.

உப்பைத் தின்ற இவரும், இவரது சகாக்களும்தான் தண்ணீர் குடிக்க வேண்டும். ஏற்கனவே ஒரு வழக்கில் ஒரளவுக்குத்தான் தண்ணீர் குடித்துவிட்டு ஜெயக்குமார் வந்திருக்கிறார் ஜெயக்குமார். ஆனால், மிக விரைவில் வாக்கி டாக்கி போன்ற வழக்குகளில் நிரந்தரமாக தண்ணீர் குடித்திட ஜெயக்குமார் தயாராக இருக்க வேண்டும்" என்று ஆர்.எஸ்.பாரதி அறிக்கையில் கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in