அண்ணாமலை செங்கோட்டைக்குச் சென்று போராட வேண்டும்: மாணிக்கம் தாகூர் எம்பி

அண்ணாமலை செங்கோட்டைக்குச் சென்று போராட வேண்டும்: மாணிக்கம் தாகூர் எம்பி

``தமிழ் மக்கள் மீது உண்மையான அன்பிருந்தால் செங்கோட்டைக்குச் சென்று மோடி அரசை எதிர்த்து அண்ணாமலை போராட்டம் நடத்த வேண்டும்'' என விருதுநகர் எம்.பி விமர்சனம் செய்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஓபிசி பிரிவின் மாநில பொதுக்கூட்டம் மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநில ஓபிசி அணி தலைவர் நவின் வரவேற்புரை ஆற்றினார். காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் கோபண்ணா, மாநில துணை தலைவர் ரோசன் பூசைய்யா ஆகியோர் பங்கேற்றனர். விழாவிற்கு தலைமையேற்று விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், "இந்த கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், முக்கியமாக 2024 தேர்தலில் அமைப்பு ரீதியாக என்ன மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்ற ஆலோசனை செய்யப்பட்டது. காங்கிரஸ் சம்பந்தமாக என்னென்ன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது என்ற மொழிபெயர்ப்பு புத்தகத்தை இன்று இந்த கூட்டத்தில் வெளியிடப்பட்டது.

பேரறிவாளன் குற்றமற்றவன் போல சீமான் உள்ளிட்ட கட்சிகள் சித்தரிப்பது கண்டிக்கத்தக்கது. பேரறிவாளன் விடுதலை என்பது மன வேதனையைத் தரக்கூடிய விஷயமாக உள்ளது. இதைக் கொண்டாடுவது வருத்தத்துக்குரியது. பேரறிவாளன் குற்றமற்றவன் என நீதிமன்றம் சொல்லவில்லை, குற்றவாளி என்று தான் சொல்கிறது.

2014-ல் காங்கிரஸ் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டு மோடி அரசு வந்தவுடன், பெட்ரோல் விலையை வானளாவிய உயர்த்திய பெருமையை மோடி அரசு பெற்றுள்ளது. தமிழகத்தில் மாநில அரசு பெட்ரோல் விலையை ஒரு வருடங்களாக உயர்த்தவே இல்லை. அண்ணாமலை மோடி அரசை எதிர்த்து போராட வேண்டும். செங்கோட்டைக்கு செல்லவேண்டிய அண்ணாமலை வழிமாறி ஜார்ஜ் கோட்டைக்கு சென்றுள்ளார். தமிழக மக்கள் மீது உண்மையான அன்பே இருந்திருந்தால் 75 ஏக்கர் நிலம் வைத்துள்ள அண்ணாமலை செங்கோட்டைக்குச் சென்று மோடிக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in