தேனியில் பாஜக நிர்வாகியின் கார் கண்ணாடி உடைப்பு: சென்னையிலிருந்து ஊர் திரும்பியவர் அதிர்ச்சி

தேனியில் பாஜக நிர்வாகியின் கார் கண்ணாடி உடைப்பு: சென்னையிலிருந்து ஊர் திரும்பியவர் அதிர்ச்சி

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜக மற்றும் அதன் ஆதரவு நிர்வாகிகளின் இல்லங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு வருகிறது. இவ்விசயத்தில் வன்முறையில் ஈடுபடுவோர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என டிஜிபி சைலேந்திரபாபுவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இவ்விவகாரத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் நிர்வாகிகள் உள்பட சிலர் கைதும் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும் வன்முறைகள் ஓய்ந்தபாடில்லை. இந்நிலையில் தேனி மாவட்டம், சின்னமனூரில் இன்று காலையில் பாஜக நிர்வாகியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

தேனி மாவட்டம், சின்னமனூரைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் பாஜகவில் உள்ளாட்சி மேம்பாட்டுப்பிரிவு மாநில செயலாளராக உள்ளார். இவருக்கு சின்னமனூர்-தேனி சாலையில் சொந்தமாக பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. அங்கு கட்டுமானப் பணிகள் நடந்துவருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் தன் காரை நிறுத்திவிட்டு பிரபாகரன் சென்னை சென்று இருந்தார். இன்று காலையில் சென்னையில் இருந்து வந்த பிரபாகரன் தன் காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு, கீறல் விழுந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தேனி மாவட்ட எஸ்.பி பிரவீன் உமேஷ் டோங்கரே நேரில் சென்று ஆய்வு செய்தார். போலீஸார் நடத்திய விசாரணையில் நேற்று நள்ளிரவில் சந்தேகத்திற்குரிய மர்ம நபர்கள் அந்தப் பகுதியில் சுற்றி வந்ததாகத் தெரியவந்தது.

இதனிடையே பாஜக நிர்வாகியின் கார் உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து தகவல் பரவியதும், ஏராளமான பாஜகவினர் திரண்டனர். போலீஸார் அவர்களிடம் விரைவில் குற்றவாளிகளைப் பிடிப்போம் என வாக்குறுதி கொடுத்து அனுப்பிவைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in