"வாரிசு என்பது படமாக இருந்தாலும், பதவியாக இருந்தாலும் சரி அது பிரச்சினைதான்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து குறித்து முதலில் பேசியது நாங்கள்தான். அதன்பிறகுதான் ரங்கசாமியே பேசினார். மாஹே, ஏனாம் வேண்டாம். புதுச்சேரிக்கு மாநில உரிமை தரக்கோரி தொடர்ச்சியாக போராடுவோம். ரங்கசாமி கூட்டணி வைத்துள்ள பாஜகவிடம் மாநில அந்தஸ்துக்காக போராடவேண்டியதில்லை; கேட்டுப் பெற்று சாதிக்க வேண்டும். காமராஜரின் சீடன் எனக் கூறிக் கொண்டவர் பாஜகவிடம் கூட்டணி வைத்தபிறகு என்ன ஆலோசனை சொல்ல முடியும்.
மாநில அந்தஸ்துக்கு ரங்கசாமிக்கு ஆதரவாக கருத்து சொன்னோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரங்கசாமி உளமாற மாநில அந்தஸ்துக்கு போராடுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. பதவியை அனுபவித்துவிட்டார். மக்களுக்கு நல்லது செய்யும் எண்ணம் போய்விட்டது.
காங்கிரஸ் குடும்பம் என்பதால் கமலஹாசனுக்கு அதில் ஈர்ப்பு இருப்பது சகஜம்தான். டெல்லியில் போய் ராகுலுடன் கூட்டத்தில் பங்கேற்பதால் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிடும் எண்ணம் கமலுக்கு இருக்கலாம். ஆனால் நாங்கள் தனித்துதான் போட்டியிடுவோம். கூட்டணி சேர்வது கொள்கைக்கு இடம் தராது. எங்களுடன் சேர்ந்து கூட்டணி அமைக்க யாரும் வரமாட்டார்கள். தனிமனிதன் மூலமே புரட்சி பரவியது. அதுபோல் என்னாலும் முடியும்.
ஆளுநரே தேவையில்லாத தலையீடுதான். ஆளுநர் பதவியே திரும்ப பெற வேண்டும். மக்களால் தேர்வான அரசே சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பாஜக இல்லாத மாநிலங்களில் உளவு பார்க்க ரவி, தமிழிசை போன்றோர் நியமிக்கப்பட்டு மேலிடத்துக்கு தகவல் சொல்வது அனைவருக்கும் தெரிந்ததுதான்.
புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்கள் சரணடைந்ததால் புதுச்சேரியை எளிதாக கைப்பற்ற பாஜக நினைக்கிறது. புதுச்சேரியை பிடித்துவிட்டால் அதன்பிறகு தமிழகத்தில் கால்பதிக்கலாம் என்று பார்க்கிறது. இப்போது பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை அதிமுக எடுத்தாலும் தேர்தலின்போதுதான் அதை உறுதியாக கூற இயலும். வாரிசு என்றாலே, அது படம் என்றாலும் சரி, பதவியாக இருந்தாலும் சரி பிரச்சினைதான். அதானி, அம்பானிக்கு செய்ததைத் தவிர்த்து இந்திய மக்களுக்கு எந்த ஒரு நல்லதையும் பாஜக அரசு செய்யவில்லை” என கூறினார்/