வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

‘கட்சியில் இருந்து சிலர் செல்வது சாதாரண விஷயம்’ -வானதி சீனிவாசன் விளக்கம்

‘உணர்ச்சிவசப்பட்டு சொல்லும் கருத்துக்கள் எதுவும் கூட்டணிக்குள் பாதிப்பை ஏற்படுத்தாது’ என தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

கோவை சித்தாபுதூர் பகுதியில் பாஜக மகளிரணி சார்பில் 25 பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி இன்று  நடைபெற்றது. அதனை தொடங்கி வைத்த  வானதி சீனிவாசன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "சாதாரண மகளிர் வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியவர் பிரதமர் நரேந்திர மோடி. பெண்களுக்கான அடிப்படை தேவைகள், பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்திய மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். பெண்கள் தலைமையிலான முன்னேற்றத்திற்காக மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

கோவை தெற்கு தொகுதியில் மகளிர் தினத்தை முன்னிட்டு, இன்று சுயம் என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம். சுய வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக ஆயிரம் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி அளித்து, தையல் இயந்திரம் வழங்க உள்ளோம். முதற்கட்டமாக இன்று 25 பெண்களுக்கு வழங்கியுள்ளோம். 12 இடங்களில் இந்த மையம் தொடங்கப்பட உள்ளது. மகளிரணி சார்பில் பாராளுமன்ற தேர்தலுக்கு தயார்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்த உள்ளோம்.

வட மாநில தொழிலாளர்கள் பிரச்சனையால் ஏற்பட்ட பதட்டமான சூழலால் தொழிலை தொடர முடியாத சூழல் உள்ளது. இவ்விவகாரத்தை ஆரம்பத்திலேயே தமிழக அரசு சரியாக கையாளாததால் மிகப்பெரிய பூதமாக மாறியிருக்கிறது. அப்போதே புலம் பெயர் தொழிலாளர்களுக்கு எதிராக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருப்பின் இந்த நிலை வந்திருக்காது.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆக்கபூர்வமான கூட்டணியாக செயல்படுகிறோம். ஒரு கட்சி கொள்கையை மற்றொரு கட்சி ஏற்க முடியாது. அதிமுக நிர்வாகிகள் மற்றும் பாஜகவில் இருந்து விலகியவர்கள், தலைமை பற்றி சொன்ன கருத்துக்களால் கட்சிக்குள் இருப்பவர்களுக்கு மன வருத்தம் உள்ளது. இதனால் உணர்ச்சிவசப்பட்டு சொல்லும் கருத்துகள் கூட்டணிக்குள் பாதிப்பை ஏற்படுத்தாது. 

சில எதிர்பாராத நிகழ்வுகள் நடந்துள்ளது. இருந்தாலும் பலமான கூட்டணியாக தேர்தலை சந்திப்போம். கூட்டணி குறித்து தேசிய தலைமை முடிவு எடுக்கும். தற்போது ஏற்பட்ட மனக்காயங்கள் ஆறும் வாய்ப்புள்ளது. அடுத்த தேர்தலில் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும்.

கட்சியில் இருந்து சில நபர்கள் செல்வது சாதாரண விஷயம். இதை கூட்டணிக்குள் பலவீனமாக்கும் முயற்சியாக பார்க்க வேண்டாம்.

திமுக ஆட்சியை கவிழ்க்க மற்றவர்கள் சதி செய்ய வேண்டியதில்லை. அதற்கு அவர்களே தகுதியானவர்கள். எதிர்கட்சிகளை பார்த்து முதலமைச்சர் பயப்பட வேண்டாம். அமைச்சர்கள், குடும்பத்தை பார்த்து தான் பயப்பட வேண்டும்.

அண்ணாமலையின் தைரியமான பேச்சு, வேகமான செயல்பாடு என்னை ஈர்க்கக்கூடியது. ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரோடு தன்னை ஒப்பிட்டது, தலைமைப் பண்பை வெளிப்படுத்தும் வகையில் தான். அதை திரித்து அவர்களின் பர்சனாலிட்டி உடன் ஒப்பிடுவது தவறு. கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் செயல்பாடுகளில் மாற்றுக் கருத்து இருந்தாலும், அவர்களின் ஆளுமைகள் ஏதொவொரு வகையில் அனைவரையும் ஈர்க்கக்கூடியது. ஈரோடு இடைத்தேர்தலின் ஆரம்பத்தில் கூட்டணிக்குள் பிரச்சனை இருந்தது. பின்னர் அது சரியாகிவிட்டது. இந்த கூட்டணி இப்போது நல்லபடியாக உள்ளது. எந்த பிரச்சனையும் இல்லை" என்று  அவர் கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in