கமலாலயத்திற்கு படையெடுத்த அதிமுக பிரமுகர்கள்!- காரணம் இதுதான்?
மாநிலங்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு வழங்கக் கோரி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை வைத்தியலிங்கம் உள்ளிட்ட அதிமுகவினர் சந்தித்தனர்.
தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியாகும் 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி இடங்களுக்கு வரும் ஜூன் 10-ம் தேதி தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 6 நியமன எம்.பிக்களின் பதவிக்காலம் முடிவடையவுள்ளது. இந்நிலையில் திமுக சார்பில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலைக் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாகவே முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டார். சு.கல்யாணசுந்தரம், கே.ஆர்.என். ராஜேஸ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் திமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். மேலும் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டது.
அதிமுகவில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு, ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால் அதிமுக தரப்பில் மாநிலங்களவை வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் குழப்பம் நீடித்து வந்தது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் உள்ளிட்ட அதிமுகவினர் பாஜக அலுவலகத்திற்குச் சென்று, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்தனர். இது குறித்து வைத்தியலிங்கம் கூறுகையில், “மாநிலங்களவை தேர்தலில் பாஜகவிடம் ஆதரவு கோரி கடிதம் கொடுத்துள்ளோம். எங்களுக்கு ஆதரவு தருவதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதிமுக வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள்” என்றார்.