
இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை முடக்கும் வகையில் அமெரிக்கா புதிய திட்டத்தை மேற்கொண்டு வருவது உலக நாடுகள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தியாவுக்கு பாதுகாப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை, அதன் விளைவாக மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையின் துறைமுகங்களை மேம்படுத்தும் பணியில் சீனா மிகப்பெரிய முதலீடு செய்து இலங்கைக்கு உதவுவது போல இலங்கையின் துறைமுகங்களை கிட்டத்தட்ட தன் வசப்படுத்தும் சூழ்நிலையில் உள்ளது. தன்னுடைய ஆராய்ச்சிக் கப்பல்களையும் இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி இலங்கைத் துறைமுகத்திற்கு சீனா கொண்டு வந்துள்ளது.
இந்த நிலையில் இலங்கையின் துறைமுக மேம்பாட்டிற்கு உதவி செய்யும் புதிய திட்டத்தை அமெரிக்க முன்னெடுத்துள்ளது. சீனாவுடன் போட்டியிடும் வகையில் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் ஆழ்கடல் கப்பல் கொள்கலன் முனையத்தை நிர்மாணிப்பதற்காக 553 மில்லியன் டாலர் திட்டத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது. இலங்கையில் அமெரிக்கா மேற்கொள்ளும் மிகப்பெரிய முதலீடு இது ஆகும்.
கடுமையான நிதி மற்றும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இலங்கை போராடி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இலங்கைக்கு இது மகிழ்ச்சியையும், சீனாவிற்கு அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது. கொழும்பு துறைமுகம் 2021ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. மேலும் இந்தப் புதிய முனையம் வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு பெரிய பொருளாதார வளர்ச்சியை கொடுக்கும்.
பசிபிக் கடலிலும், சீனக் கடலிலும் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்கா, தற்போது இந்திய பெருங்கடலில் காலடி எடுத்து வைத்துள்ளது. சீனாவின் ஆதிக்கத்திற்கு இது முற்றுப்புள்ளியாக அமையும் என்று கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் இது இந்தியாவிற்கு மகிழ்ச்சியான செய்தியாகும்.
பாதுகாப்பு ரீதியாகவும், கடல் ரீதியாகவும், ஆசிய வளர்ச்சி ரீதியாகவும் இந்தியாவிற்கு இந்த முடிவு சாதகமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.