
பாகிஸ்தான் உடனான கிரிக்கெட் போட்டியில் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கம் எழுப்பியது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, ஜெய் ஸ்ரீ ராம் என்று மட்டுமே பதில் அளித்துவிட்டு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கிளம்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் பாகிஸ்தான் வீரர்களை வெறுப்பேற்றும் வகையில் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிடப்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில், திமுக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் விளையாட்டுப் போட்டிகளில் இது போல் வெறுப்பை காட்டும் முழக்கங்களை எழுப்பக் கூடாது என கட்டம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னிமலையில் பாஜக சார்பில் பாதயாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களிடம் பேசிய இணையமைச்சர் எல்.முருகன், ”3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில் சென்னிமலை முருகன் கோயில். கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றப்பட்ட பெருமை இக்கோயிலை சாரும். 2 ஆண்டுகளுக்கு முன்பு கந்த சஷ்டி கவசத்தை அவமரியாதை செய்தனர். இதற்காக பாஜக வெற்றிவேல் யாத்திரை நடத்தியது. மீண்டும் ஒரு தாக்குதல் நடைபெற்று உள்ளது. சென்னிமலை கோயில் குறித்து அவதூறு பேசியவர்கள் மீது முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இந்த விவகாரம் தமிழக அரசு முழுமையாக தோல்வி அடைந்திருப்பதை காட்டுகிறது.
பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக தினம்தோறும் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெற்று வந்தது. பிரதமர் மோடி பதவியேற்ற பின்னர் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் கூட நடைபெறவில்லை. மீனவர்களின் ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. கடலோர காவல் படை மற்றும் கடற்படை மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து வருகிறது. அமலாக்க துறையும், வருமானவரித்துறையும் அவர்களுக்கு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் தான் சோதனைகளை நடத்துகிறார்கள். திமுக என்றாலே கட்டப்பஞ்சாயத்து வாரிசு அரசியல் தான்.” என விமர்சித்தார்.
இதையடுத்து, ஜெய் ஸ்ரீ ராம் முழக்கம் விவகாரம் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது ’நான் இதற்கு ஒற்றை வரியில் பதில் கூற வேண்டுமென்றால் ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஸ்ரீ ராம்’ என்று சொல்லிக் கொண்டே நகர்ந்தார். செய்தியாளர்கள் இடைவிடாமல் கேட்ட போதும், 10 முறைக்கு மேல் ’ஜெய் ஸ்ரீ ராம்’ என்று மட்டுமே கூறிவிட்டு அவர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் வாசிக்கலாமே...
பிஎஸ்சி படித்தவர்களுக்கு ரூ.1,40,000 சம்பளத்தில் விமான நிலையத்தில் வேலை!
லீக்கானது ‘லியோ' படத்தின் கதை... படக்குழுவினர் அதிர்ச்சி!
பெற்றோரிடம் ரூ.2 லட்சம் பேரம்; குழந்தையை விற்க முயற்சி- அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்
பிரபஞ்ச அழகிப் போட்டியில் புதுமை... 2 திருநங்கைகள் பங்கேற்பு!
எனக்கு அதைத் திருடுற பழக்கம் இருக்கு... நடிகை கீர்த்தி சுரேஷ்!