தனது புகைப்படத்தில் ஏறி மிதிக்கும் சனாதனிகளின் வீடியோவுக்கு, சமூக வலைதளத்தில் ஸ்மைலி போட்டு ரசித்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்று உரையாற்றியது முதலே தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனிகள் மத்தியில் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டு வருகிறார். பாகுபாடுகளை விதைக்கும் சனாதன சித்தாத்தம் ஒழிய வேண்டும் என்று உதயநிதி பேசியதை, அந்த சனாதனத்தை பின்பற்றும் இந்துக்களை அழித்தொழிக்க வேண்டும் என்று பேசியதாக திரித்து வடக்கே பரப்பினார்கள்.
இதனையடுத்து பாஜக மட்டுமன்றி இந்துத்துவ அமைப்புகள் மற்றும் தங்களை சனாதனிகளாக அறிவித்துக்கொண்டோர், அமைச்சர் உதயநிதிக்கு எதிராக பொதுவெளி மற்றும் இணையவெளியில் தீவிரமாக களமாடி வருகின்றனர். சனாதனத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் திமுக அங்கம் வகிக்கும் ’இந்தியா கூட்டணி’யை தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் வகையில் பாஜக அதிரடி அரசியலை தொடர்ந்து வருகிறது.
எனினும் மறுப்போ, வருத்தமோ தெரிவிக்காது, தான் பேசிய கருத்திலும், கொள்கையிலும் உதயநிதி உடும்பாக இருக்கிறார். இதனால் அவரது தலை, நாக்கு ஆகியவற்றை குறிவைத்தும் சனாதனிகள் சர்ச்சையை கிளப்பி வருகிறார்கள். இந்த வரிசையில் அண்மை வெளியீடாக, ஹரியாணா மாநில ஐடி விங் சார்ந்த சிலர் இன்று காலை விநோதமான வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோவில் சனாதானத்துக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் உதயநிதி ஸ்டாலின், ஆ.ராசா உள்ளிட்டோரின் புகைப்படங்கள் தரையில் கிடத்தப்பட்டிருக்க, சனாதனிகள் அதில் ஏறி முன்னும்பின்னுமாக மிதித்து நடக்கிறார்கள். கூடவே ’இந்துக்கள் விழிப்பு கண்டிருக்கிறார்கள்’ என்ற வாசகத்தையும் பதிவிட்டிருக்கிறார்கள்.
எக்ஸ் தளத்தில் இந்த வீடியோ வெளியானதும் முதல் நபராக அதற்கு கமெண்ட் செய்திருக்கிறார் உதயநிதி. ஒற்றை ஸ்மைலியை பதிவிட்டு அந்த வீடியோவை சுலபமாய் கலாய்த்து கடந்திருக்கிறார் உதயநிதி. வீடியோ பதிவைவிட, அதனை உதயநிதி எதிர்கொண்ட விதம் வைரலாகி வருகிறது.