சிவசேனா, தாக்கரே பெயர்களைப் பயன்படுத்தாமல் எவ்வளவு தூரம் செல்வீர்கள்?: உத்தவ் தாக்கரே சவால்

சிவசேனா, தாக்கரே பெயர்களைப் பயன்படுத்தாமல் எவ்வளவு தூரம் செல்வீர்கள்?: உத்தவ் தாக்கரே சவால்

சிவசேனா மற்றும் தாக்கரேவின் பெயர்களைப் பயன்படுத்தாமல் நீங்கள் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான குழுவுக்கு உத்தவ் தாக்கரே சவால் விடுத்துள்ளார்

மகாராஷ்ட்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் அவரது மகன் ஆதித்யா தாக்கரே ஆகியோர் இன்று சிவசேனா கட்சியின் மாவட்ட தலைவர்களை சந்தித்தனர். சிவசேனா தலைமையகத்தில் நடந்த கூட்டத்தில் ஆதித்ய தாக்கரே நேரடியாக கலந்துகொண்டார்.

கரோனா தொற்று பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் காணொலி காட்சி மூலமாக மாவட்ட செயலாளர்களிடம் உரையாற்றிய உத்தவ் தாக்கரே, "சிவசேனாவை விட்டு வெளியேறுவதை விட சாவதே மேல் என்று அறிவித்தவர்கள் இன்று ஓடிப்போய்விட்டனர். சிவசேனா மற்றும் தாக்கரேவின் பெயர்களைப் பயன்படுத்தாமல் நீங்கள் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்று பார்ப்போம்.

என் உடல், என் தலை மற்றும் கழுத்து முதல் என் கால்கள் வரை வலிக்கிறது. சிலர் நான் குணமடைய மாட்டேன் என்று நினைத்தார்கள். என் கண்கள் திறக்கப்படவில்லை, ஆனால் நான் என்னைப் பற்றி கவலைப்படவில்லை, கட்சியை பற்றியே கவலைப்படுகிறேன். நீங்கள் கட்சியை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும், இப்போது எங்களுடன் யாரும் இல்லை" என தெரிவித்தார்

மேலும், "கடந்த நவம்பர் மாதம் இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்து உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது எம்எல்ஏக்கள் எனது முதுகுக்கு பின்னால் எனக்கு எதிராக துரோகம் செய்தனர். நான் தேவையில்லையென்று எனக்கு தெரியப்படுத்தினால், நான் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன். பாலாசாகேப் என்னை நேசித்ததை விட சிவசேனாவை அதிகமாக நேசித்தார். நீங்கள் என்னைவிட திறமையானவர் என்று நினைத்தால் நான் அவருடைய மகன் என்பதை மறந்துவிட்டு சிவசேனாவை முன்னெடுத்துச் செல்லுங்கள்.

ஒருவருக்கு பேராசை இருக்கலாம், ஆனால் உங்களுக்கு எல்லாவற்றையும் கொடுத்த நபரை சாப்பிட முயற்சிக்கும் அளவுக்கு அதிகமாக இருக்கக்கூடாது. வெற்றி தோல்விகள் வாக்குகளால் தீர்மானிக்கப்படுகிறது, நீங்கள் தோற்றால் மக்கள் உங்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவார்கள்" என கூறினார்

தொடர்ந்து பேசிய அவர், "தற்போது எங்களுக்கு எதிராக சென்றுள்ளவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற அசுர ஆசை கொண்டவர்கள். அவர்கள் தாக்கரே மற்றும் சிவசேனா என்ற பெயரை பயன்படுத்தாமல் பிழைக்கவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். ஏக்நாத் ஷிண்டேவுடன் சென்றால் உங்களுக்கு எதிர்காலம் இருப்பதாக நீங்கள் நினைத்தால் நீங்கள் சுதந்திரமாக செல்லலாம், நான் உங்களைத் தடுக்க மாட்டேன். தற்போது எனக்கு எதிராக செயல்படுபவர்களை பாஜக இயக்குகிறது.

எனக்கு அதிகாரத்தை பிடிப்பதில் விருப்பமில்லை. இதற்கு முன்பும் நாங்கள் ஏமாற்றப்பட்டோம், ஆனால் இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்தோம். நான் ஒரு கும்பலால் சூழப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன, அதே குற்றச்சாட்டு எனது தந்தை பாலாசாகேப் தாக்கரே மீதும் கூறப்பட்டது. அவர்கள் ஆதித்யா தாக்கரேவைக் குறிப்பிடலாம், ஆனால் ஏக்நாத் ஷிண்டேவின் மகன் எம்.பியாக உள்ளார், ஆனால் என் மகனை அரசியலுக்கு வந்ததில் அவருக்கு என்ன பிரச்சினை" என தெரிவித்தார்

முன்னதாக நேற்று ஏக்நாத் ஷிண்டே 37 எம்எல்ஏக்கள் கையெழுத்திட்ட கடிதத்தை துணை சபாநாயகர் நர்ஹரி ஷிர்வாலுக்கு அனுப்பி தன்னை சிவசேனா சட்டமன்றக் கட்சியின் தலைவராகவும், பாரத்ஷேட் கோகவாலேவை கட்சியின் தலைமைக் கொறடாவாகவும் அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in