"சட்டம் ஒழுங்கு பற்றி முதல்வர் அவ்வப்போது ஆய்வு நடத்துவதாக வரும் செய்திகள் வெற்று விளம்பரத்திற்காகத்தானோ என்று நினைக்க வைக்கிறது இது போன்ற தொடர் லாக் அப் மரணங்கள்" என்று அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், "சென்னை கொடுங்கையூரில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ராஜசேகர் என்பவர் போலீஸ் காவலில் இருக்கும்போது தாக்கப்பட்டு மரணமடைந்தார் என்ற செய்தி மிகவும் கவலை அளிப்பதாக இருக்கிறது. சட்டம் ஒழுங்கு பற்றி முதல்வர் அவ்வப்போது ஆய்வு நடத்துவதாக வரும் செய்திகள் வெற்று விளம்பரத்திற்காகத்தானோ என்று நினைக்க வைக்கிறது இது போன்ற தொடர் லாக் அப் மரணங்கள்.
இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போதெல்லாம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்; இனி நடக்காமல் பார்த்துக்கொள்ளப்படும் என்று முதல்வர் சொன்னதெல்லாம் வெறும் கண்துடைப்புதான் என்று மக்களை நினைக்க வைத்திருக்கிறது சமீபத்திய இந்த மரணம். இதை இறுதி எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு, கொடுங்கையூர் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுத்து, தமிழகத்தில் இனியும் லாக் அப் மரணங்கள் நடக்காமல் இருப்பதை காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் உறுதி செய்யவேண்டும்.
இதற்கு மேலும் இந்த அரசு இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டினால், நீதிமன்றமே நேரடியாகத் தலையிட்டு லாக்அப் மரணங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.