அதிமுக ஒன்றிணைய வாய்ப்பே இல்லை... டி.டி.வி.தினகரன் திட்டவட்டம்

 டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

அதிமுக ஒன்றிணைய வாய்ப்பில்லை எனவும் எந்த காரணத்தை கொண்டும் பழனிசாமி உடன் அமமுக ஒன்றிணைந்து செல்வதற்கு வாய்ப்பில்லை எனவும் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

கோவை சின்னியம்பாளையம் பகுதியில் அமமுக சார்பில் நாளை நடைபெற உள்ள ஒருங்கிணைந்த கோவை மாவட்ட செயல்வீரர் கூட்டத்தில், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொள்கிறார். இதற்காக விமான மூலம் கோவை வந்தடைந்த அவர் கோவையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய டி.டி.வி.தினகரன், ”ஒன்றிணைந்த கோவை மாவட்ட செயல்வீரர் கூட்டத்திற்காக கோவை வந்துள்ளேன். வினாஷ காலே விபரீத புத்தி என்பது போல் அழிய போகிறவர்கள் தான் அடுத்தவர்களை பார்த்து பேசுவார்கள். (இபிஎஸ்ஸை குறிப்பிட்டு) துரியோதனன் கூட்டம் என்றைக்கும் ஜெயித்ததில்லை.

துரியோதனன் கூட்டம் என்று எங்களைப் பார்த்து சொல்கிறார். அவர்கள் வீழ்வது உறுதி. எனக்கு தெரிந்து அதிமுக ஒன்றிணைய வாய்ப்பில்லை. எந்த காரணத்தை கொண்டும் பழனிசாமி உடன் அமமுக ஒன்றிணைந்து செல்வதற்கு வாய்ப்பில்லை. ஓபிஎஸ் நடத்தும் நிகழ்ச்சியில் அழைப்பு வந்தால் அது குறித்து யோசிப்போம்'' என்றார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

செல்லூர் ராஜு, அடுத்த பிரதமர் மோடி தான், அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் என கூறுவது குறித்த கேள்விக்கு, ”அவர் பேசியதற்கு நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும். அவர் ஒரு விஞ்ஞானி, விஞ்ஞானியின் பேச்சு சாதாரண மக்களாகிய நமக்கெல்லாம் புரியாது. அமமுக- ஓபிஎஸ் நட்பு அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் நல்ல முறையில் தொடர்கிறது.

பாஜக, அதிமுக, இரண்டு கட்சிகளும் ஒன்றாக இருந்தது. தற்போது பிரிந்துவிட்டது என்று தான் பார்க்க வேண்டும். அமமுக பாஜக கூட்டணிக்கு வாய்ப்பு குறித்து யூகங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை. எங்களுடைய நிலைப்பாடுகளை உரிய நேரத்தில் தெரிவிப்போம்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in