`இந்த அவல நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்'- டி.டி.வி.தினகரன் காட்டம்

`இந்த அவல நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்'- டி.டி.வி.தினகரன் காட்டம்

“ஓபிஎஸ் திருந்திவிட்டார். எடப்பாடி பழனிசாமி திருந்தினால் அவரோடு சேர்வது பற்றி யோசிப்பேன். சொந்த கட்சிக்காரர்களையே காசு கொடுத்து வாங்கும் அவல நிலையில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். எனக்குத் தெரிந்தவரை அவர் திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை” என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் அமமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அமமுக பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த பொதுக்குழுவில் டி.டி.வி.தினகரன் உரையாற்றும் போது, “நமக்கென்று ஒரு கட்சி இருக்கிறது. அம்மாவின் திருப்பெயரைத் தாங்கி இருக்கிறது. நாம் தேர்தலிலே வெற்றி பெற்ற பிறகு அந்த இயக்கம் தானாக நம்மிடம் வந்து சேரும். 3,000 பேர் பொறுப்பிலே அமர்ந்து கொண்டு அங்கே விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். தனக்குப் பதவி இல்லை என்பதால் ஓபிஎஸ் அன்றைக்கு அம்மாவின் ஆட்சிக்கு எதிராகச் செயல்பட்டார். ஒரு குடும்பத்தின் பின்னால் ஆட்சி இருக்கிறது எனச் சொல்லி தவறாகச் செயல்பட்டுவிட்டோம் என்பதை உணர்ந்தார்.

ஜெயலலிதாவின் மரணத்தில் சசிகலாவிற்குத் தொடர்பு இருக்கிறது என ஆரம்பத்தில் சொல்லியவர், எனக்கு அந்த சந்தேகம் இல்லை, பொதுமக்களுக்கு சந்தேகம் இருக்கிறது என சொன்னார். தன்னுடைய தவறை உணர்ந்து அதிலிருந்து மாறிவந்துவிட்டார். ஆனால் பழனிசாமி இன்னும் மாறவே இல்லை. மேலும் மேலும் தவறுகளைச் செய்து கொண்டு வருகிறார். மேடையில் நாலு கால் பிராணி போலத் தவழ்ந்து வந்து முதல்வர் பதவி கொடுத்த சசிகலாவிற்குத் துரோகம் செய்தார். அந்த ஆட்சி நிலைக்க பாடுபட்ட நமக்கெல்லாம் துரோகம் செய்தார். ஆட்சி பறிபோய்விடும் நிலையில் கைகொடுத்த பன்னீர் செல்வத்திற்குத் துரோகம் செய்தார். பொதுச்செயலாளர் என்ற பதவி ஜெயலலிதாவைத் தவிர யாருக்கும் கிடையாது என்று சொல்லிவிட்டு, ஜெயலலிதாவிற்குத் துரோகம் செய்துவிட்டு அந்த பதவியில் அவரே வந்து விட்டார். அவர் திருந்தினால் அவரோடு சேர்வது பற்றி யோசிப்பேன். சொந்த கட்சிக்காரர்களையே காசு கொடுத்து வாங்கும் அவல நிலையில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். எனக்குத் தெரிந்தவரை அவர் திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in