``திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி அமைச்சராவதில் தவறில்லை. ஆனால் அதற்காக ஸ்டாலின் காட்டும் அவசரம்தான் ஏன் என்று தெரியவில்லை'' என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், இன்று தஞ்சாவூரில் தொண்டர்கள் மத்தியில் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார். அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு செயல்பட்டால் தான், திமுக என்கிற தீய சக்தியை தேர்தலில் வீழ்த்த முடியும்.
ஜெயலலிதாவின் உண்மையான தொண்டன் இல்லை என்பதை எடப்பாடி பழனிசாமி நிரூபித்து வருகிறார். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் என தங்களை கருதுபவர்கள், ஒற்றுமையாக இருந்து செயல்பட்டால் தான் திமுகவை வீழ்த்த முடியும் என்கிற எதார்த்த உண்மை உணர்ந்து, இணைந்து செயல்பட்டால்தான் தேர்தல் என்ற போரில் திமுகவை வெற்றி பெற முடியும்.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆவதில் தவறில்லை. ஆனால் ஸ்டாலின் ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறார் என்ற காரணம் தெரியவில்லை. இந்த அவசரத்திற்கான காரணத்தை காலம் உணர்த்தும். தேர்தல் வாக்குறுதி கொடுத்துவிட்டு மக்களை ஏமாற்றுவது தான் திராவிட மாடல் ஆட்சி. புதுச்சேரி மக்கள் அப்படி ஏமாறுவார்களா என தெரியாது.
ஆனால் தமிழ்நாட்டு மக்கள் வருத்தத்தில் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருந்த திமுக திருந்தியிருப்பார்கள் என வாய்ப்பு அளித்தனர். விடியல் ஆட்சி எனக் கூறினார்கள். ஆனால் அது தற்போது விடியா மூஞ்சி ஆட்சியாக உள்ளது என மக்கள் வருத்தத்தில் உள்ளனர். எனவே புதுச்சேரியில் விடியல் ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பொதுமக்கள் திமுகவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பார்கள் என்பது தேர்தலில் தெரியும்" என்று தெரிவித்தார்.