
திமுகவின் மூத்த நிர்வாகியாகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் இருப்பவர் திருச்சி சிவா. இவரது மகன் சூர்ய சிவா, திமுக மீதும் தனது தந்தை சிவா மீதும் கொண்ட அதிருப்தி காரணமாக திமுகவில் இருந்து விலகி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்பு தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.
அதன் பிறகு அவர் அண்ணாமலையின் வலதுகரம் போல் செயல்பட்டதோடு, அவருக்கு ஆதரவாக மட்டுமே கருத்துக்களை கூறி வந்தார். அவருக்கு மாநில ஓபிசி அணியில் முக்கிய பொறுப்பும் கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில், பாஜக சிறுபான்மையினர் அணியில் பதவி வழங்குவதில் டெய்சி சரணுக்கும், சூர்யா சிவாவிற்கும் மோதல் ஏற்பட்டது. அந்த சமயத்தில் டெய்சி சரண், திருச்சி சூர்யா இருவரிடையேயான செல்போன் உரையாடல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, கட்சி நிகழ்ச்சியில் 6 மாதங்கள் பங்கேற்க சூர்யாவுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து பாஜகவில் இருந்து விலகுவதாக சூர்யா அறிவித்தார்.
இதனையடுத்து சில வாரங்கள் அமைதியாக இருந்தவர் கடந்த மாதம் மீண்டும் ஒரு ட்விட் போட்டார். அதில், ‘கட்சியை விட்டு வெளியில் வந்தாலும் அண்ணாமலை பற்றி நான் விமர்சனம் செய்யாமல் தான் இருந்தேன். வாழ்க்கையில் ஒரு விஷயம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் உண்மையாக இருப்பதைவிட யாரிடம் உண்மையாக இருக்கிறோம் என்பது மிக முக்கியம். நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை அவர்கள் முதலில் உணர வேண்டும்.
நான் அப்படிப்பட்ட ஒரு நபர் அண்ணாமலை என்று நினைத்தேன் ஆனால், அது பொய் என்று தெரிந்து விட்டது. கூடிய விரைவில் அவருடைய பொய் பிம்பம் உடையும்’ என திருச்சி சூர்யா தெரிவித்திருந்தார்.
இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அண்ணா குறித்து அண்ணாமலையின் பேச்சுக்கு கூட்டணி கட்சியான அதிமுக கடும் கண்டனம் தெரிவித்தது. ஒரு கட்டத்தில் இந்த விவகாரம் வில்லங்கமாகி பாஜக கூட்டணியில் இருந்தே அதிரடியாக விலகியது அதிமுக.
இப்படியான சூழலில் திருச்சி சூர்யா அதிமுகவில் இணைய இருப்பதாக தகவல் பரவி வருகிறது. நவம்பர் 5-ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அக்கட்சியில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. திருச்சி சூர்யா அதிமுகவில் இணைந்த பின் அண்ணாமலை மீதான அவரது விமர்சனங்கள் அதிகரிக்கலாம் என்றும் அவரை வைத்தே அண்ணாமலைக்கு அதிமுக பதிலடி கொடுக்கும் என்றும் சொல்கிறார்கள்.