`இந்த சம்பவம் வேதனையை தருகிறது; ஆனாலும், தனி மனிதனை விட இயக்கம் தான் பெரிது'- திருச்சி சிவா

செய்தியாளர்களை சந்திக்கும் திருச்சி சிவா
செய்தியாளர்களை சந்திக்கும் திருச்சி சிவா

தன் வீடு தாக்கப்பட்ட சம்பவம் அறிந்து இன்று திருச்சி திரும்பிய திமுக கொள்கை பரப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா, ''தனி மனிதர்களை விட கட்சி பெரிது'' என்று தெரிவித்துள்ளார்

திருச்சியில் நடைபெற்ற இறகுப் பந்து மைதானம் திறப்பு விழாவில் திருச்சி சிவாவின் பெயர் இடம் பெறவில்லை என்பதால் அந்த மைதானத்தை திறந்து வைக்க வந்த அமைச்சர் கே.என். நேருவுக்கு திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் நேற்று கருப்புக் கொடி காட்டினர். அதனால் கோபமடைந்த அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் திருச்சி சிவாவின் வீட்டுக்குள் புகுந்து வீட்டையும் ஆதரவாளர்களையும் தாக்கினர். 

கருப்புக் கொடி காட்டிய சிவாவின் ஆதரவாளர்களை திருச்சி போலீஸார் கைது செய்து திருச்சி செசன்ஸ்  கோர்ட் காவல் நிலையத்தில் வைத்திருந்தனர். அங்கு வந்தும் சிவாவின் ஆதரவாளர்களை  ஹாஜாமலை விஜய் உள்ளிட்ட  நேரு ஆதரவாளர்கள் தாக்கினர். இது இந்திய அளவில் மிகக் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் காஜாமலை விஜய் உள்ளிட்ட நான்கு பேரை திமுகவிலிருந்து நீக்கி அறிவிப்பு வெளியானது. அவர்கள் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

இந்த நிலையில் பக்ரைனில் நடைபெற்ற  கருத்தரங்கை  முடித்துக் கொண்டு இன்று நண்பகல் திருச்சிக்கு விமானம் மூலம் வந்த திருச்சி சிவா எம் பி, நேருவின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்ட தமது வீட்டையும் வாகனங்களையும்  கண்டு மிகுந்த வேதனைக்குள்ளானார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு,  'நான் தனி நபர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவன். நாடாளுமன்றத்தில் இருந்து ஒரு குழு 178 நாடுகள் கலந்து கொண்ட மாநாட்டிற்காக பக்ரைன் சென்று இருந்தேன். என் வீட்டில் நடந்த தாக்குதல் குறித்த செய்திகளை நான் ஊடகங்கள் வாயிலாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் தெரிந்து கொண்டேன்.

இப்போது நான் எதையும் பேசுகின்ற மனநிலையில் இல்லை, கடந்த காலத்திலும் இது போன்ற பல சோதனைகளையும் சந்தித்துள்ளேன். அதையெல்லாம் நான் பெரிது படுத்தியதில்லை. யாரிடமும் சென்று புகார் அளித்ததும் இல்லை. நான் அடிப்படையில் முழுமையான, அழுத்தமான திமுக கட்சிக்காரன். தனி மனிதனை விட இயக்கம் பெரிது, கட்சி பெரியது என்று எண்ணுகிறவன்.

இப்போது நடந்து இருக்கிற இந்த நிகழ்ச்சி மிகவும் மன வேதனையை ஏற்படுத்துகிறது. . நான் ஊரில் இல்லாதபோது என்னுடைய குடும்பத்தார் மிகவும் மன வேதனைக்கு ஆளாகி உள்ளனர். என் வீட்டில் பணியாற்றிய 65 வயது பெண்மணி மற்றும் எனது நண்பர்கள் வயது முதிர்ந்தவர்கள் எல்லாம் காயப்பட்டு உள்ளனர். நான் பேசுவதற்கு நிறைய உள்ளது. ஆனால் நான் இப்போது பேசக்கூடிய மன நிலையில் இல்லை.

மனச்சோர்வில் உள்ளேன். மனச்சோர்வு என்கிற வார்த்தையை நான் இதுவரை பயன்படுத்தியதில்லை.  இந்த தாக்குதல் சம்பவம் எனக்கு பெரும் வேதனையைத் தந்துள்ளது. பிறகு முழு விவரத்துடன் உங்களை சந்திக்கிறேன்" என்று  தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in