கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் உள்ள பேக்கரி ஒன்றில் ஆறடி உயரத்தில் முதல்வர் ஸ்டாலினின் அச்சு அசலான உருவத்தில் கேக் செய்து அசத்தியுள்ளனர்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ராஜேஸ்வரி பேக்கரியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வித்தியாசமான வகையில் கேக் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டனர். அதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலினின் முழு உருவ சிலையை கேக்கில் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தனர். அதற்கான மூலப் பொருட்களுடன் முதல்வர் ஸ்டாலின் உருவத்தில் 6 அடி உயரம், 92கி எடை கொண்ட பிரம்மாண்ட கேக்கை தயாரித்துள்ளனர்.
90 கிலோ சர்க்கரை, 80 முட்டைகளைக் கொண்டு 4 பேர் ஒருநாளில் இந்த கேக்கை தயாரித்துள்ளனர். இது அப்படியே அச்சு அசலாக ஸ்டாலின் உருவச்சிலை போலவே அமைந்திருப்பதை கண்டு அனைவரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்வதாகவும், அவரை உற்சாகப்படுத்தும் விதமாகவும் அவரின் உருவ வடிவிலான இந்த கேக் தயாரிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பார்வைக்காக இரண்டு நாட்களுக்கு வைக்கப்பட்டுள்ள இந்த கேக்கை பலரும் வந்து பார்த்துவிட்டு செல்ஃபி எடுத்து மகிழ்ச்சியுடன் செல்கின்றனர்.