’தொடர் மிரட்டல்களால்தான் அந்த முடிவை எடுத்தேன்’: ஓபிஎஸ்சிடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!

’தொடர் மிரட்டல்களால்தான் அந்த முடிவை எடுத்தேன்’: ஓபிஎஸ்சிடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!

எடப்பாடி பழனிசாமி ஒற்றை தலைமைக்கு பொறுப்பேற்கச் சம்மதம் தெரிவிக்காதவர்களைக் கட்சியிலிருந்து நீக்குவோம் எனத் தெரிவித்ததால்தான் வேறு வழியின்றி அவருக்கு ஆதரவு அளித்தேன் என ஓபிஎஸ் முகாமுக்கு திரும்பிய ஜெயதேவி என்ற திருநங்கை தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் தென் சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட மகளிர் அணி துணை செயலாளராக இருப்பவர் ஜெயதேவி. அக்கட்சியில் ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சத்தை அடைந்த நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளராகச் செயல்பட்டு வந்த இவர் கடந்த இருதினங்களுக்கு முன்னர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் ஓபிஎஸ்ஸை சந்தித்த அவர் தனது செயல் குறித்து மன்னிப்பு கோரினார்.

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயதேவி,“எடப்பாடி பழனிசாமியை கட்சியின் ஒற்றை தலைமையாக்க ஆதரவு அளிக்காத நபர்களை கட்சியில் இருந்து நீக்குவோம் என தெரிவித்ததால் மட்டுமே அவருக்கு ஆதரவு அளித்தேன். அம்மா இறந்தவுடன் ஓபிஎஸ்ஸின் வழியைத்தான் தொடர்ந்தோம். எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் பதவி ஏற்றதும், ஆதரவு அளிக்காதவர்களைக் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கி விடுவோம் என மாவட்டச் செயலாளர்கள் மூலம் மிரட்டல் வந்தது. அதனால்தான் வேறு வழியின்றி அவருக்கு ஆதரவு தெரிவித்தோம். அதனால் பொதுக்குழுவிற்கு சென்று அரை மணி நேரம் தான் அங்கு இருந்தோம். பின்னர் ஓபிஎஸ் டெல்லியிலிருந்து வரும் வரை மன நிம்மதி இல்லாமல் இருந்தேன். தற்போது விமான நிலையத்தில் அவரை சந்தித்து மன்னிப்பு கேட்டேன். மீண்டும் ஓபிஎஸ்க்கு ஆதரவு அளிக்க முடிவு எடுத்துவிட்டேன்.” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in