நேரு, அன்பில் மகேஷ் முட்டல் மோதல்: தூக்கியடிக்கப்பட்ட 2 அதிகாரிகள்

கே.என். நேரு
கே.என். நேரு

மணப்பாறையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பெயர் இடம் பெறாத விவகாரத்தில் அரசு  உயர் அதிகாரிகள்  இருவர் அதிரடியாக  பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி மாவட்ட திமுகவில் பேரரசராக கோலோச்சியவர்  திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு. முதல்வர் ஸ்டாலினின் குடும்பத்திற்கு நெருங்கியவரான அமைச்சர் அன்பில் மகேஷ் அரசியலுக்குள் வந்த பிறகு திருச்சி மாவட்டத்திற்குள் நேருவின் செல்வாக்கை குறைக்கும் வேலைகளில் சிலர் ஈடுபட்டனர். அத்துடன் தலைமையிடம் தனக்கு இருந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி திமுக மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நேருவை  அகற்ற வைத்தார் அன்பில் மகேஷ்.

மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து மாற்றுவதற்காக நேருவுக்கு கட்சியில் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. திமுகவின்  முதன்மைச் செயலாளராக ஆக்கப்பட்டார். திருச்சி மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு அன்பில் மகேஷ் ஒரு மாவட்ட செயலாளராகவும்,  மற்ற இரண்டு மாவட்டங்களுக்கு நேருவின் ஆதரவாளர்கள் மாவட்ட செயலாளராகவும் இருக்கின்றனர்.

இந்த நிலையில் அன்பில் மகேஷ், மாவட்ட செயலாளராக இருக்கும் திருச்சி தெற்கு மாவட்டத்தில் உள்ள மணப்பாறை நகராட்சியில் கால்நடை சந்தைக்கு அருகே 5-வது வார்டில் மணப்பாறை சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.9 லட்சத்தில் ஆழ்துளை கிணறு, மின்மோட்டாருடன் கூடிய குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. 

அன்பில் மகேஷ்.
அன்பில் மகேஷ்.

இதனைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கடந்த 19-ம் தேதி திறந்து வைத்தார். இதற்காக நகராட்சி சார்பில் அங்கு அமைக்கப்பட்டிருந்த கல்வெட்டில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,  நகராட்சி தலைவர் கீதா மைக்கல் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. ஆனால், அந்தத் துறையின் அமைச்சரான கே.என்.நேருவின் பெயர் இடம் பெறவில்லை.

இந்த விவகாரம் அப்பகுதி திமுகவினரிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து நகராட்சி நிர்வாகத்துறை உயர்மட்ட அதிகாரிகள் வரை தகவல்கள் சென்றது. கட்சி ரீதியாகவும் தலைமைக்கு இதுகுறித்து புகார்கள் சென்றன. இதைத்தொடர்ந்து  அங்கே  வைக்கப்பட்டிருந்த கல்வெட்டு உடனடியாக அகற்றப்பட்டது.

இந்த நிலையில்  பணியில் அலட்சியமாக இருந்ததாகக் கூறி மணப்பாறை நகராட்சி பொறியாளர் விஜய் கார்த்திக் நாகப்பட்டினத்துக்கும், நகராட்சி பணிகள் மேற்பார்வையாளர் ராஜேஷ் திருத்துறைப்பூண்டிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அரசியல்வாதிகள் ஆடும் ஆட்டத்திற்கு அப்பாவி அரசு  அதிகாரிகள் பலிகடா  ஆக்கப்படுகிறார்கள் என்று   அரசு ஊழியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in