பழனிவேல் தியாகராஜன்
பழனிவேல் தியாகராஜன்டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 முறைக்கேடு தொடர்பாக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

‘டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வில் முறைகேடா?’ -அமைச்சர் பிடிஆர் புதிய தகவல்

டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு தொடர்பாக எழுந்திருக்கும் புகார்கள் குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் வெளியிடப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது பேசிய அவர், ‘’காரைக்குடியில் ஒரே மையத்தில் பயின்ற அனைவரும் தேர்ச்சி பெற்றது எப்படி? அடுத்தடுத்த பதிவெண் கொண்ட தேர்வர்கள் தேர்ச்சி பெற்றது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்’’ என்றார்.

இதற்கு பதிலளித்து பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ’’ தென்காசியில் மட்டும் 397 நபர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 2 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றதாக தவறாக அந்த பயிற்சி மையம் குறிப்பிட்டுள்ளது. மேலும் அந்த மையத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் கிளைகள் உள்ளது தெரிய வந்துள்ளது.

முறைகேடு புகார் தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மனித வள மேலாண்மைத்துறை செயலாளரிடம் சொல்லி விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. தேர்வில் முறைகேடு புகார் வந்ததும் செயலாளரிடம் விசாரிக்க அறிவுறுத்தினேன். தேர்வு முறையில் சீர்திருத்தங்களை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குரூப்-4 தேர்வில் தட்டச்சர் முதுநிலை அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களை மாவட்ட வாரியாக கேட்டுள்ளோம். காரைக்குடியில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 615 பேர் தேர்ச்சி குறித்து தேர்வு மைய அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

முன்னதாக இது போன்ற தேர்ச்சி உள்ளதா என ஒப்பிட்டு அறிக்கை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவை குறித்து விரிவான அறிக்கை அளிக்க டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் செயலருக்கு உத்தரவிட்டுள்ளேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in