
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 10ம் தேதியே பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பணத்தை வரவு வைக்க தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
திமுக அரசின் முன்னோடி திட்டங்களில் ஒன்றான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த செப்டம்பர் 15ம் தேதி துவங்கப்பட்டது. இதில் 1 கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் பேர் பயனாளர்களாக இணைக்கப்பட்டு, தகுதி வாய்ந்த இல்லத்தரசிகள் அனைவருக்கும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருந்தது. வழக்கமாக 15ம் தேதி மகளிர் உரிமைத் தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த நிலையில், கடந்த மாதம் 14ம் தேதியே வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது.
இதையடுத்து விடுபட்டவர்கள் மேல் முறையீடு செய்ய வாய்ப்பளிக்கப்பட்ட நிலையில், 11 லட்சத்து 85 ஆயிரம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர். இவர்களில் தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்து குறுஞ்செய்திகள் அனுப்பும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகை வருகிற 12-ம் தேதி கொண்டாடப்பட உள்ளதால், பொதுமக்களின் வசதிக்காக முன்கூட்டியே உரிமைத் தொகையை வரவு வைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடப்பட்டது.
இது குறித்து ஆலோசனை நடத்திய தமிழ்நாடு அரசு, பயனாளர்களின் வசதிக்காக, மகளிருக்கு தீபாவளி பரிசாக 10ம் தேதியே பணத்தை அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்க முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.