
காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப மாவட்ட ஆட்சியர்களுக்குத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் அனுப்பி இருக்கிறார். அந்த கடிதத்தில், “ஒவ்வொரு மாவட்டத்திலும் கடந்த செப்டம்பர் 3-ம் தேதி நிலவரப்படி காலியாக இருக்கும் கிராம உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை பற்றிய தகவலை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க மாவட்ட ஆட்சியர்கள் அந்த தகவலை அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் 2,748 கிராம உதவியாளர் காலியிடங்கள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
இந்த காலிப்பணியிடங்களை விதிகளுக்கு உட்பட்டு உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி எந்தவித விதிமீறலும் இல்லாமல் கிராம உதவியாளர் காலியிடங்களை நிரப்ப வேண்டும். இதற்காகப் பெறப்படும் விண்ணப்பங்களை நவம்பர் 14-ம் தேதி பரிசீலித்து, முறையான நேர்காணல் நடத்தி டிசம்பர் 19-ம் தேதிக்குள் பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும். மேலும் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை டிசம்பர் 19-ம் தேதி வெளியிட்டு அன்றே பணி ஆணைகளை வழங்க வேண்டும்.
இதற்கான எழுத்துத்திறன் தேர்வைக் கண்காணிக்க தாலுகா அளவில் துணை மாவட்ட ஆட்சியரைக் கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்க வேண்டும். கிராமத்தைப் பற்றிய விவரங்கள், நில வகைப்பாடுகள், கிராம கணக்குகள் அல்லது மாவட்ட ஆட்சியர் கூறும் தலைப்பு பற்றி 100 வார்த்தைக்கு மிகாமல் கட்டுரை எழுதச் செய்யலாம். வாசிப்புத் திறனை அறிந்து கொள்வதற்காக ஏதாவது ஒரு புத்தகத்திலும் இருந்து சில வாசகங்களை விண்ணப்பதாரரை வாசிக்கச் சொல்லலாம். அதற்கான விதிகள், வழிகாட்டுதல்களை வட்டாட்சியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சுற்றறிக்கையாக வழங்க வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.