திகார் சிறையிலிருக்கும் அரவிந்த் கேஜ்ரிவால் உடல்நிலை குறித்து ஆம் ஆத்மி கூறிய புகார்களை, திகார் ஜெயில் நிர்வாகம் உடனடியாக மறுத்துள்ளது.
டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால், டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கேஜ்ரிவால் உடல்நலன் குறித்து இன்றைய தினம் காலையில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் கவலை எழுப்பி இருந்தனர். சிறையில் அடைக்கப்பட்டதால் உடல்நலன் குன்றியதில் கேஜ்ரிவால் 4.5 கிலோ வரை எடை குறைந்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி கவலை தெரிவித்தது.
"அரவிந்த் கேஜ்ரிவால் கடுமையான நீரிழிவு நோயாளி. கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதில் இருந்து, அவரது உடல் எடை 4.5 கிலோ குறைந்துள்ளது. இது மிகவும் கவலையளிக்கிறது. அவரை சிறையில் அடைப்பதன் மூலம் அவரது உடல்நிலையை பாஜக மேலும் ஆபத்தில் ஆழ்த்துகிறது. கேஜ்ரிவாலுக்கு ஏதாவது நடந்தால் முழு நாடு மட்டுமல்ல, கடவுள் கூட அவர்களை மன்னிக்க மாட்டார்" என்று ஆம் ஆத்மி மூத்த அமைச்சர் அதிஷி இன்று காலை தெரிவித்திருந்தார்.
அதிஷியின் இந்த எக்ஸ் தள பதிவு உடனடியாக வைரலானது. மக்களவை தேர்தலுக்கு தயாராகும் சமூக ஊடக அரசியல் பிரச்சார களத்திலும் இது எதிரொலித்தது. இதனைத் தொடர்ந்து, அடுத்த சில மணி நேரங்களில், ஆம் ஆத்மி அமைச்சரின் குற்றச்சாட்டை மறுத்து திகார் சிறை நிர்வாகம் பதில் அளித்துள்ளது.
’கடந்த மூன்று நாட்களாக கெஜ்ரிவாலின் எடையில் எந்த மாற்றமும் இல்லை. ஏப்ரல் 1 அன்று அரவிந்த் கேஜ்ரிவாலை 2 டாக்டர்கள் பரிசோதித்தனர். மேலும் அவரது உடல் எடை என்பது, சிறைக்கு வந்ததிலிருந்து இன்றுவரை 65 கிலோ என்றளவில் மாற்றமின்றியே உள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி வீட்டில் சமைத்த உணவு அவருக்கு வழங்கப்படுகிறது. அவர் முழு ஆரோக்கியத்துடனே உள்ளார்’ என்று சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்... பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்!
கேளிக்கை விடுதியில் பயங்கர தீ விபத்து... 29 பேர் எரிந்து உயிரிழந்த பரிதாபம்!
வள்ளி கும்மி நடனமாடி வாக்கு சேகரித்த அண்ணாமலை... கோவை பரப்புரையில் குதூகலம்!
தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ரூ.4 கோடி பறிமுதல்... வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை!