அமைச்சர் கார் மீது காலணி வீச்சு: 3 பாஜக மகளிர் அணியினரைத் தட்டித் தூக்கிய போலீஸ்

அமைச்சர் கார் மீது காலணி வீச்சு:  3 பாஜக மகளிர் அணியினரைத் தட்டித் தூக்கிய போலீஸ்

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய சம்பவத்தில் பாஜக மகளிரணியைச் சேர்ந்த 3 பெண்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவவீரர் லட்சுமணன் வீரமரணமடைந்தார். அவரது உடலுக்கு ஆக.13-ம் தேதி தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பும் போது அவரது காரின் மீது காலணி வீசப்பட்டது. இந்த சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக பாஜக மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அத்துடன், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்து மன்னிப்பு கோரினார். இதனால் அவரை கட்சியில் இருந்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை நீக்கினார்.

இந்த நிலையில் அமைச்சரின் கார் மீது காலணி வீசிய சம்பவம் தொடர்பாக பாஜக மாவட்ட துணைத்தலைவர் ஜெயவேல், குமார், பாலா, கோபிநாத், ஜெயகிருஷ்ணன், கோபிநாத், முகமது யாகூப் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 15 நாள் நீதிமன்ற காவலில் மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் அமைச்சர் கார் மீது காலணி வீசிய சம்பவத்தில் தொடர்புடைய பாஜக மகளிர் அணியைச் சேர்ந்த சரண்யா, தனலெட்சுமி, தெய்வானை ஆகிய 3 பேரையும் தனிப்படை போலீஸார் அதிரடியாக நேற்று கைது செய்தனர். இதுவரை அமைச்சர் மீது காலணி வீசிய சம்பவத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in