தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை ஆங்கில வார இதழில் வெளியானது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தமிழக அரசிற்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவிலேயே இன்று நிர்வாகத் திறமையற்ற ஒரு மாநில அரசு உண்டு என்றால், அது தற்போது தமிழகத்தில் உள்ள விடியா திமுக அரசாகும். கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், பள்ளி கல்லூரி மாணவர்களின் மர்ம மரணங்கள் போன்றவை கடந்த 15 மாத திமுக ஆட்சியில் நாள்தோறும் நடைபெற்று வருகின்றன.
ரோம் நகரம் பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தது போல், தமிழகம் சீரழிந்து போன நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். தற்போது தமிழகத்தில் நடக்கும் அத்தனை அக்கிரமங்களையும் கண்டு கொதிப்படைந்து போய் உள்ள மக்களை திசை திருப்ப, அருணா ஜெகதீசன் ஆணைத்தின் அறிக்கை வெளியீடு என்ற ஒரு நாடகத்தை ஸ்டாலின் அரங்கேற்றி இருக்கிறார்.
ஆணையத்தின் இறுதி அறிக்கை கடந்த மே மாதம் சீல் இடப்பட்ட உறையில் வைத்து ரகசிய அறிக்கையாகத்தான் இந்த அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 3000 பக்கங்கள் கொண்டதாகக் கூறப்படும் இந்த அறிக்கையில் என்ன பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்பது யாருக்கும் தெரியாது. இந்த அரசும் இதுவரை வெளியிடவில்லை. ஆனால் அறிக்கையில் என்னென்ன உள்ளது என்பது பற்றி ஒரு ஆங்கில வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அரசிடம் உள்ள ரகசிய ஆவணம் ஒன்று அந்த ஆங்கில நாளிதழுக்கு எப்படிக் கிடைத்தது?. அந்த ஆங்கில ஏட்டிற்கு ஆட்சியாளர்களே தகவலை கசியவிட்டார்களா அல்லது ரகசியத்தைக் காக்க முடியாத அரசின் கையாலாகாத்தனமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.