தூத்துக்குடி, ஸ்டெர்லைட் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு படுகொலைகள் தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை பல்வேறு உண்மைகளை அம்பலப்படுத்தியுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மேலும் அவர் கூறுகையில், அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான், அனைத்திற்கும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் ஆனால், இதுவரையிலும் ஏதோ அப்பாவி போல ஊடகங்களிடம் நடித்து வந்தார் என்றும் இப்போதும், துப்பாக்கிச் சூட்டின் கொடூரம் தொடர்பாக கள்ள மெளனம் சாதிப்பதுடன், சபாநாயகரை கண்டித்து உண்ணாவிரதம் என்ற பெயரால் திசைதிருப்பும் நோக்கத்துடன் ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
தனது ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற பெரும் தவறு குறித்த எந்தவித குற்ற உணர்வும் இல்லாத இந்த போக்கு கிரிமினல் தனமான ஒன்று என்றும் தமிழ் நாட்டு மக்கள் இதனை மன்னிக்கவே மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.