தமிழக பாஜகவில் ரவுடிகளும், மோசடி பேர்வழிகளும் இணைந்துள்ளதைப் பார்த்து தான் அமைச்சர் துரைமுருகன் அந்த கட்சி அசுர வளர்ச்சி அடைந்துள்ளதாக கூறியிருக்கலாம் என விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினரான மாணிக்கம் தாகூர் எம்.பி கூறியுள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளத்தில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திராகாந்தி பிறந்தநாள் விழா இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி பேசுகையில்," குறைந்த பட்ச இருப்புத்தொகை இல்லாமல் ஏழரை கோடி பேருக்கு வங்கிகணக்கை பாஜக தொடங்கி வைத்து. தற்போது அந்த வங்கிக்கணக்கில் குறைந்தபட்ச பணம் இல்லையென வங்கிகள் பணம் பிடுங்கி வருகின்றன. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட 7 பேரின் விடுதலை சட்ட விரோதமானது.
தமிழகத்தில் பாஜக வில் ரவுடிகளும், மோசடி பேர்வழிகளும் அதிக அளவில் இணைந்துள்ளனர். இதைப்பார்த்து தான் அமைச்சர் துரைமுருகன், பாஜக அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறது என கூறியிருக்கலாம். பாஜகவுக்கு தமிழக மக்கள் மனதில் என்றும் இடமில்லை. தமிழக மண் எப்போதும் பாஜகவிற்கு எதிரானது. அக்கட்சி இங்கு என்றுமே வளர முடியாது. பெட்ரோல், டீசல், கியாஸ் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலையேற்றத்தால் பாஜக மீது பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்" என்றார்.